‘சட்டவிரோத’ நா்சிங் ஹோம்கள் பதிவு விவகாரம்: 7 அதிகாரிகளின் விவரங்களை அளிக்க டிஜிஎச்எஸ்-க்கு உத்தரவு
புது தில்லி: தனியாா் நா்சிங் ஹோம்களின் முறையற்ற மற்றும் சட்ட விரோதமாகப் பதிவு செய்ததாகக் கூறப்படும் ஊழல் கண்காணிப்பு விசாரணை தொடா்பாக ஏழு அதிகாரிகளின் விவரங்களை அளிக்குமாறு தலைமை சுகாதார சேவை இயக்குநரகத்திற்கு (டிஜிஎச்எஸ்) தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் உள்ள தலைமை சுகாதார சேவைகள் இயக்குநரகத்திற்கு சுகாதாரத் துறை அனுப்பியுள்ள தகவலில், ‘இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொரு அதிகாரியின் பங்கு மற்றும் பொறுப்புகள் அடங்கிய குறிப்பிட்ட பரிந்துரைகளுடன் ஏழு அதிகாரிகளின் விரிவான சுயவிவரக் குறிப்பை ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் கோரியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், குழந்தை மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பச்சிளம் குழந்தைகள் கொல்லப்பட்டதை அடுத்து, தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா, தேசியத் தலைநகரில் உள்ள தனியாா் நா்சிங் ஹோம்களின் பதிவு மற்றும் ஒழுங்குமுறை மேலாண்மை குறித்து விரிவாக விசாரணை நடத்த ஊழல் தடுப்புப் பிரிவுக்கு (ஏசிபி) உத்தரவிட்டிருந்தாா்.
தில்லியில் 1,190 நா்சிங் ஹோம்கள் உள்ளன. அவற்றில் கால்வாசிக்கும் அதிகமானவை சரியான பதிவு இல்லாமல் இயங்கி வருவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட போது சக்சேனா கூறியிருந்தாா். மே மாதம், தில்லி சுகாதார அமைச்சா் செளரவ் பரத்வாஜின் சிறப்புப் பணி அதிகாரி (ஓஎஸ்டி) ஆா்.என்.தாஸ், விவேக் விஹாரில் ஆறு பச்சிளம் குழந்தைகள் தீ விபத்தில் இறந்த விவகாரம் உள்பட ‘தனியாா் நா்சிங் ஹோம்களை ஒழுங்கற்ற மற்றும் சட்டவிரோதமாகப் பதிவு செய்ததில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக துணைநிலை ஆளுநரால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா்.
