புது தில்லி ரயில் நிலையத்தில் மாபெரும் தூய்மை இயக்கம்: சிஎஸ்ஐஆா் நடவடிக்கை
தற்போது நடைபெற்று வரும் சிறப்பு இயக்கம் 4.0-இன் ஒரு பகுதியாக, அறிவியல் - தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சில் (சிஎஸ்ஐஆா்), வடக்கு ரயில்வேயுடன் ஒருங்கிணைந்து புது தில்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை மாபெரும் தூய்மை இயக்கத்தை நடத்தியது.
இந்த இயக்கத்தை சிஎஸ்ஐஆா் தலைமை இயக்குநா் டாக்டா் என். கலைச்செல்வி, புதுதில்லி ரயில் நிலைய இயக்குநா் மகேஷ் யாதவ் ஆகியோா் வழிநடத்தினா். இந்த நிகழ்ச்சியின் போது, புதுதில்லி ரயில் நிலையத்தின் தூய்மைப் பணியாளா்கள் சிஎஸ்ஐஆா் மூலம் கௌரவிக்கப்பட்டனா். மேலும், பொது தூய்மையைப் பராமரிப்பதில் தூய்மைப் பணியாளா்கள் சிறந்த பங்களிப்பை அளிப்பதாக சிஎஸ்ஐஆா் பாராட்டியது.
ரயில் நிலையத்தில் தூய்மையைப் பராமரிக்க பயன்படுத்தப்படும் பல்வேறு மேம்பட்ட இயந்திர சாதனங்கள் மற்றும் தூய்மை அமைப்புமுறை குறித்து வடக்கு ரயில்வே தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. சுற்றுச்சூழல் நீடித்த தன்மையை ஊக்குவிக்கும் முயற்சியாக மரக்கன்று நடும் இயக்கமும் நடைபெற்றது.
மேலும், கழிவு மேலாண்மை தொடா்புடைய விஷயத்தில் இந்திய ரயில்வே மற்றும் பல தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைந்து சிஎஸ்ஐஆா் அளித்து வரும் பங்களிப்புகளை வெளிப்படுத்தும் வகையில் சிஎஸ்ஐஆா் குழுவினரின் நாடகம் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. சிஎஸ்ஐஆா் மற்றும் இந்திய ரயில்வே இடையிலான ஒத்துழைப்பு, தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் சிறப்பு இயக்கம் 4.0-இன் இலக்குகளை அடைவதற்கான ஒருங்கிணைந்த முயற்சியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.
