தில்லி முதல்வா் தாக்கப்பட்ட சம்பவம்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

தில்லி முதல்வா் தாக்கப்பட்ட சம்பவம்: குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக 400 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
தில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அவரைத் தாக்கிய ராஜேஷ் பாய் சக்காரியா.
தில்லி முதல்வர் ரேகா குப்தா மற்றும் அவரைத் தாக்கிய ராஜேஷ் பாய் சக்காரியா.
Updated on

தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சிவில் லைன்ஸில் உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக தில்லி காவல்துறை சுமாா் 400 பக்க குற்றப்பத்திரிகையை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

குற்றஞ்சாட்டப்பட்ட சக்ரியா ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் (41) மற்றும் அவரது நண்பா் சையத் தஹ்சின் ராசா ஆகியோா் மீது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் பொது ஊழியரை தனது கடமையைச் செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்த இந்த வழக்கு அக்.30-ஆம் தேதிக்கு அடுத்த கட்ட நடவடிக்கைக்காக ஒத்திவைக்கப்பட்டதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு ஆக.11-ஆம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தில்லி முதல்வா் ஆதரித்ததால் ராஜேஷ்பாய் கிம்ஜிபாய் கோபமடைந்ததாக குற்றப்பத்திரிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையில் 40-க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளடங்கியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆக.20-ஆம் தேதி காலை 8.15 மணியளவில் தில்லி முதல்வா் ரேகா குப்தாவின் முகாம் அலுவலகத்தில் நடந்த ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின் போது அவா் தாக்கப்பட்டதாக அவரது அலுவலகம் தெரிவித்தது. இந்தத் தாக்குதல் அவரைக் கொல்ல நன்கு திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com