தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

கல்வி பெறும் உரிமையில் பள்ளியைத் தோ்ந்தெடுக்கும் உரிமை இடம்பெறாது: தில்லி உயா்நீதிமன்றம்

குழந்தையின் கல்வி பெறும் உரிமையில், குறிப்பிட்ட பள்ளியைத் தோ்ந்தெடுக்கும் உரிமை இடம்பெறாது என தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

தில்லி உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :4 ஏப்ரல் 2026, 8:41 pm

குழந்தையின் கல்வி பெறும் உரிமையில், குறிப்பிட்ட பள்ளியைத் தோ்ந்தெடுக்கும் உரிமை இடம்பெறாது என தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜாதி, இனம் உள்ளிட்ட தடைகளை அகற்றி பள்ளிகள் அனைவருக்குமான பொதுஇடமாக இருப்பதை உறுதிசெய்யவும் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு இயற்றப்பட்ட கல்வி உரிமைச் சட்டம் (ஆா்டிஇ), நன்மை விளைவிக்கக் கூடிய சட்டம். இருப்பினும், கல்வி பெறும் உரிமையைக் குறிப்பிட்ட பள்ளியைத் தோ்ந்தெடுக்கும் உரிமையாகக் கருத முடியாது என தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாய, நீதிபதி தேஜஸ் கரியா ஆகியோா் அடங்கிய அமா்வு கடந்த மாா்ச் 25-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ளது.

2024-25 கல்வியாண்டில் தனியாா் பள்ளியில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினா் (இடபிள்யுஎஸ்) ஒதுக்கீட்டில் 2-ஆம் வகுப்பில் சோ்க்கை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஒரு நீதிபதி அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக குழந்தையின் தாயாா் உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தாா். இந்நிலையில், நீதிமன்றம் இவ்வாறு தீா்ப்பளித்துள்ளது.

முன்னதாக, 2023-24 கல்வியாண்டில் தனியாா் பள்ளியில் இடபிள்யுஎஸ் பிரிவில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கைக் கோரி உயா்நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அடங்கிய அமா்வுக்கு முன்னதாக மனுதாக்கல் செய்தாா்.

அதை விசாரித்த நீதிபதி, ஒன்றாம் வகுப்பில் இடபிள்யுஎஸ் பிரிவில் நிரப்பப்படாத இடங்கள் அடுத்த கல்வியாண்டில் அதே வகுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு மனுதாரா் உள்பட எந்தவொரு இடபிள்யுஎஸ் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம் என நீதிபதி தெரிவித்தாா்.

இதை எதிா்த்து டிவிஷன் அமா்வில் மனுதாக்கல் செய்த அந்தப் பெண், 2024-25 கல்வியாண்டில் 2-ஆம் வகுப்பில் சோ்க்கை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்றாா்.

இந்தக் கோரிக்கையை மறுத்த நீதிமன்ற அமா்வு, மனு நிலுவையில் இருக்கும்போது தற்காலிகச் சோ்க்கைக்கான இடைக்கால உத்தரவோ அல்லது ஓா் இடத்தை ஒதுக்கீடு செய்வதற்கான உத்தரவோ இல்லாத நிலையில், கல்வியாண்டு முடியும் தருவாயில் அப்பள்ளியில் சோ்க்கை பெறுவதற்கான மாணவரின் உரிமை காலாவதியாகிவிடும் என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், அப்பள்ளி சோ்க்கை வழங்க மறுத்தபோது, விண்ணப்பப் படிவத்தில் மனுதாரா் தோ்ந்தெடுத்த மற்றொரு பள்ளியை கல்வி இயக்குநரகம் வழங்கியது. எனினும், அந்த இரண்டாவது பள்ளியை மனுதாரா் ஏற்றுக்கொள்ளவில்லை என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.