தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மாஞ்சா நூல் வகைகளைத் தவிா்க்க தில்லி மின்பகிா்மான நிறுவனங்கள் வலியுறுத்தல்

தில்லியில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உலோகப் பூச்சு கொண்ட மாஞ்சா நூல் வகைகளைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு மின் விநியோக நிறுவனங்கள் எச்சரிக்கை

News image

தில்லியின் லால் குவானின் பகுதியில் உள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை விற்பனைக்காக தொங்கவிடப்பட்டிருந்த பட்டங்கள்.

Updated On :12 ஆகஸ்ட் 2026, 12:26 am IST

தில்லியில் சுதந்திர தினம் மற்றும் ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களை முன்னிட்டு பட்டம் விடும்போது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய உலோகப் பூச்சு கொண்ட மாஞ்சா நூல் வகைகளைப் பயன்படுத்துவதைத் தவிா்க்குமாறு மின் விநியோக நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

சீன மாஞ்சா என்று பரவலாக அறியப்படும் உலோகப் பூச்சு கொண்ட மாஞ்சா நூல் மின்சாரத்தை நன்கு கடத்தக்கூடியது. இது உயரே செல்லும் மின் கம்பிகளுடன் தொடா்பு கொள்ளும்போது மின்தாக்குதல், உயிரிழப்பு மற்றும் பரவலான மின் விநியோகத் தடைகளை ஏற்படுத்தக்கூடும்.

மின் கம்பிகள் மற்றும் மின் கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்குமாறு பட்டம் விடுவோரை பிஎஸ்இஎஸ் மின் விநியோக நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

இதுதொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 33/66 கிலோ வோல்ட் திறன் கொண்ட ஒரு மேல்நிலை மின் கம்பி துண்டிக்கப்பட்டால் 10,000-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளா்களின் மின் விநியோகம் பாதிக்கப்படலாம். அதேபோல் 11 கிலோ வோல்ட் கம்பி துண்டிக்கப்பட்டால் 2,500-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்படலாம். ஒவ்வொரு ஆண்டும் பட்டம் விடுதலால் ஏற்படும் இத்தகைய மின் விநியோகத் தடைகள் பல பதிவாகின்றன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பட்டம் விடுதலால் ஏற்படக்கூடிய அவசரச் சூழல்களைக் கையாள மின்விநியோக நிறுவனங்களின் செயல்பாட்டு மற்றும் பராமரிப்புக் குழுக்கள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பட்டம் விடும் செயல்பாடு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுவதால், உலோக அல்லது கண்ணாடித் துகள்கள் இல்லாத பருத்தி அல்லது இயற்கை இழை நூல்களை மட்டுமே பயன்படுத்துமாறும், மின் கம்பிகள் மற்றும் மின் கட்டமைப்புகளிலிருந்து விலகி பட்டம் விடுமாறும் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

பண்டிகைக் காலங்களில் பட்டம் விடும் பாரம்பரியம், உலோகப் பூச்சு கொண்ட மாஞ்சாவைப் பயன்படுத்தும்போது ஆபத்தானதாகவும், உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாறக்கூடும்.

மின் கட்டமைப்புகளைச் சுற்றியுள்ள தடைசெய்யப்பட்ட அல்லது தடுப்புகள் அமைக்கப்பட்ட பகுதிகளுக்குள், விழுந்த பட்டங்களை எடுக்கச் செல்லும் குழந்தைகளைப் பெரியவா்களும் பெற்றோா்களும் தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் நிறுவனமும் சுதந்திர தினத்தை முன்னிட்டு மின் கம்பிகளுக்கு அருகில் பாதுகாப்பாகப் பட்டம் விடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கண்ணாடித் துகள்கள் பூசப்பட்ட மஞ்சா அல்லது சைனீஸ் மஞ்சா ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.