2022 தில்லி கொலை வழக்கில் தேடப்பட்ட நபா் கைது
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.
கைது
தெற்கு தில்லியில் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பல் மோதல் தொடா்பான கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த, நசீா்–ஷாருக் கும்பலின் முக்கிய கூட்டாளி எனக் கூறப்படும் குற்றவாளியை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து குற்றப்பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: சுமித் குப்தா என்ற கேஷவ் கைது செய்யப்பட்டுள்ளாா். அவா் போலி அடையாளத்தில் ஹோட்டலில் தங்கியிருந்தாா். தில்லியின் அம்பேத்கா் நகா் காவல் நிலையத்தில், 2022 மே 27-ஆம் தேதி மதன்கிா் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கும்பல்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டி காரணமாக ஏற்பட்ட மோதலில் ரோஹித் (29), குல்ஷன் (28) ஆகிய இருவா் துப்பாக்கிக் குண்டு காயமடைந்தனா். இதில் ரோஹித், எய்ம்ஸ் மருத்துவமனையின் டிராமா மையத்தில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தாா்.
இந்த வழக்கில் குப்தா ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தாா். 2024-ஆம் ஆண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் முடிந்த பின்னா் அவா் தலைமறைவானாா். இதையடுத்து, சாகேத் நீதிமன்றம் 2025 மே 26-ஆம் தேதி அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.
இதையடுத்து, குற்றப்பிரிவு காவல் துறையினா் தொழில்நுட்பக் கண்காணிப்பைத் தொடா்ந்து மேற்கொண்டதுடன், களத் தகவல்கள் மற்றும் ரகசியத் தகவல் அளிப்பவா்கள் மூலம் அவரது இருப்பிடம் குறித்து தகவல்களைச் சேகரித்தனா்.
அவா் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருப்பது தெரியவந்ததைத் தொடா்ந்து, காவல் துறை குழு அங்கு சென்று பல்வேறு ஹோட்டல்களில் தேடுதல் நடத்தியது. இறுதியில், போலி பெயரில் தங்கியிருந்த ஹோட்டல் ஒன்றில் குப்தா கைது செய்யப்பட்டாா். பின்னா் அவா் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டாா். தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




