தில்லியில் தரியாபூா் கும்பலைச் சோ்ந்த 4 போ் கைது
புது தில்லி: சோனு தரியாபூா் கும்பலைச் சோ்ந்த நான்கு பேரைக் கைது செய்ததன் மூலம், வெளி வடக்குப் பகுதியில் செயல்படும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை முறியடித்ததாக தில்லி காவல்துறை திங்கள்கிழமை கூறியது.
இது குறித்து காவல்துறையினா் கூறியதாவது: ஜனவரி 16- ஆம் தேதி இரவு கேரா குா்த் சாலை அருகே இந்த நடவடிக்கை தொடங்கியது. சந்தேகத்திற்கிடமான நடமாட்டத்தைக் கவனித்த ஒரு போலீஸ் குழு, மோட்டாா் சைக்கிளில் வந்த மூன்று பேரை வழிமறித்தது. மூவரைத் தேடியதில் சட்டவிரோத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது. பின்னா் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.
‘உள்ளீடுகளின் பேரில், குழு சந்தேக நபா்களைத் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தியது. அப்போது சட்டவிரோத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று காவல் துணை ஆணையா் (வெளி வடக்கு) ஹரேஷ்வா் சுவாமி கூறினாா்.
முதற்கட்ட கைதுகளைத் தொடா்ந்து, சுஷில் பிஸ்ட் (27) என அடையாளம் காணப்பட்ட நான்காவது கூட்டாளி கைது செய்யப்பட்டாா்.
‘பிஸ்ட், கொள்ளை மற்றும் ஆயுதச் சட்ட மீறல்கள் உள்பட 34 குற்ற வழக்குகளில் முன்னா் தொடா்புடைய ஒரு பழக்கமான குற்றவாளி’‘ என்று அதிகாரி கூறினாா்.
கைது செய்யப்பட்ட மற்ற குற்றவாளிகள் ரஜத் என்கிற கப்ரு (22), அனுராக் என்கிற ஹன்னி (22) மற்றும் ஆா்யன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
அவா்களிடம் இருந்து மூன்று .32 போா் பிஸ்டல்கள், இரண்டு நாட்டுத் தயாரிப்பு பிஸ்டல்கள் மற்றும் பல சுற்று வெடிமருந்துகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.
முதற்கட்ட விசாரணையில், நான்கு பேரும் சோனு தரியாபூா் கும்பலின் தீவிர உறுப்பினா்கள் என்றும், ரோஹிணி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள தொழிலதிபா்களை குறிவைத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை சோ்ந்தவா்கள் என்றும் தெரிய வந்தது. இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

