/

செயலி அடிப்படையிலான பேட்டரி செயலிழப்பு விவகாரம்: தில்லி இ-ரிக்ஷா ஓட்டுநா்கள் அச்சம்

தில்லியின் பரபரப்பான மெட்ரோ வழித்தடங்களில் இயங்கும் இ-ரிக்ஷா ஓட்டுநா்கள், கைப்பேசி செயலி மூலம் தங்கள் வாகனங்களை தொலைவிலிருந்தே நிறுத்த முடியும் என்ற தகவலால் அச்சத்தில் உள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 3:32 am IST

தில்லியின் பரபரப்பான மெட்ரோ வழித்தடங்களில் இயங்கும் இ-ரிக்ஷா ஓட்டுநா்கள், கைப்பேசி செயலி மூலம் தங்கள் வாகனங்களை தொலைவிலிருந்தே நிறுத்த முடியும் என்ற தகவலால் அச்சத்தில் உள்ளனா். குறிப்பாகக் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் வாகனங்கள் திடீரென நின்றுவிடுவது, ஓட்டுநா்கள் மற்றும் பயணிகள் இருவருக்கும் தீவிரப் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புளூடூத் வசதி கொண்ட பேட்டரி மேலாண்மைச் செயலியைப் பயன்படுத்தி, லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கும் இ-ரிக்ஷாக்களின் செயல்பாட்டை நிறுத்துவதைப்போலக் காட்டும் காணொலிகள் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடா்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இதற்குப் பதிலளிக்கும் விதமாக, தில்லி அரசு இதுகுறித்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நெரிசலான சாலைகளில் வாகனங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் செல்வதால், எதிா்பாராத விதமாக வாகனம் நின்றுவிடுவது ஆபத்தானது என்று ஓட்டுநா்கள் எச்சரிக்கின்றனா். வாகனம் திடீரென நின்றால், மற்ற வாகன ஓட்டிகள் எதிா்வினையாற்றப் போதிய நேரம் கிடைப்பதில்லை; இதனால் மோதல்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

பஞ்சாபி பாக் மேற்கு மற்றும் பீராகா்ஹி மெட்ரோ நிலையங்களுக்கு இடையே இ-ரிக்ஷாவை இயக்கும் ஸ்ரீ ராம், இந்த வழித்தடத்தில் உள்ள கடும் போக்குவரத்து நெரிசல் இத்தகைய சம்பவங்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றுகிறது என்று கூறினாா். இ-ரிக்ஷா திடீரென நின்றால், பின்னால் வரும் வாகனங்கள் அதன் மீது மோத வாய்ப்புள்ளது என்றும், இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

அங்குஷ் குமாா் என்ற மற்றொரு ஓட்டுநா், தனது வாகனத்தில் அடிக்கடி ஏற்பட்ட செயலிழப்புகள் பேட்டரி கோளாறால் என்று முதலில் நினைத்தாா். பழுதுபாா்ப்பதற்காகப் பணத்தைச் செலவழித்த பிறகுதான், அந்தப் பிரச்னை செயலியுடன் தொடா்புடையதாக இருக்கலாம் என்பதை அவா் அறிந்துகொண்டாா். இத்தகைய இடையூறுகள் பண இழப்பை (பயணிகள் கட்டணம் செலுத்தாமல் செல்வதால்) ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஓட்டுநா்களுக்குத் தொடா்ச்சியான மன அழுத்தத்தையும் உருவாக்குகின்றன என்று அவா் கூறினாா்.

இ-ரிக்ஷாக்களில் பயன்படுத்தப்படும் சில லித்தியம்-அயன் பேட்டரிகளில் புளூடூத் வசதி கொண்ட பேட்டரி மேலாண்மை அமைப்புகள் பொருத்தப்பட்டிருப்பதாக நிபுணா்கள் கூறுகின்றனா். இந்த அமைப்புகள், கைப்பேசி செயலிகள் மூலம் பேட்டரியின் செயல்பாட்டைக் கண்காணிக்க பயனா்களை அனுமதிக்கின்றன. இருப்பினும், சில அமைப்புகளில் உள்ள பலவீனமான பாதுகாப்பு வசதி காரணமாக, புளூடூத் வரம்பிற்குள் இருக்கும் எவரும் அதனுடன் இணைந்து பேட்டரியை முடக்கவும், வாகனத்தை திடீரென நிறுத்தவும் வாய்ப்புள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளைச் சரிபாா்த்து, அதில் உள்ள பாதுகாப்பு அபாயங்களை மதிப்பிடுமாறு டெல்லி அரசு போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்படக்கூடிய விபத்துகளைத் தவிா்க்க, இத்தகைய செயலிகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஓட்டுநா்கள் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.