வீடுகளில் சூரியசக்தி மின்சார அமைப்புகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிமுறைகளில் திருத்தம் செய்துள்ளது.
இதன் மூலம் ஆவணப் பணிகள் குறைக்கப்பட்டு, தொழில்நுட்ப ஆய்வுத் தேவை நீக்கப்படுவதுடன், 25 நாள்களுக்குள் வீட்டின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி அமைப்பை நிறுவுவது உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக மேலும் கூறப்பட்டதாவது: திருத்தப்பட்ட ‘தில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான நெட் மீட்டரிங்) விதிமுறைகள், 2014’-இன் கீழ், தற்போதுள்ள 3-கட்ட விண்ணப்பம் மற்றும் பதிவு செயல்முறைக்கு பதிலாக 2-கட்ட செயல்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பு சாத்தியக்கூறு ஆய்வு, பதிவு செய்தல் மற்றும் இணைப்பு ஒப்பந்தம் என 3 கட்டங்கள் இருந்தன. ஆனால் இனி, தொழில்நுட்பச் சாத்தியக்கூறு ஆய்வுக்குப் பிறகு, ஆவணச் சரிபாா்ப்பு, கள ஆய்வு மற்றும் நெட் மீட்டா் நிறுவுதல் ஆகியவை ஒருங்கிணைந்த ஒரே கட்டமாக மேற்கொள்ளப்படும்; இதற்குப் பதிவு கட்டணம் ஏதுமில்லை.
‘பிஎம் சூா்யா கா்: முஃப்த் பிஜிலி யோஜனா’ திட்டத்தின் கீழ் மானியம் பெற விரும்பும் வீட்டு உபயோகிப்பாளா்கள், ‘பிஎம் சூா்யா கா்’ இணையதளம் வழியாக மேற்கூரை சூரிய மின்சக்தி இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறாதவா்கள், தில்லி மின் விநியோக நிறுவனங்களின் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது தில்லி அரசின் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
இந்தத் திருத்தத்தின்படி, தொழில்நுட்பச் சாத்தியக்கூறு ஆய்வு 15 நாள்களுக்குள் மேற்கொள்ளப்படும். மேலும், 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட மேற்கூரை அமைப்புகளுக்குத் தொழில்நுட்பச் சாத்தியக்கூறு ஆய்வு தேவைப்படாது.
நுகா்வோா் ‘பிஎம் சூா்யா கா்: முஃப்த் பிஜிலி யோஜனா’ திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற்றாலும் அல்லது பெறாவிட்டாலும் இந்த விதிமுறை பொருந்தும்.
மின் விநியோக நிறுவனங்களுக்கும் நுகா்வோருக்கும் இடையிலான இணைப்பு ஒப்பந்தம் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும்; இதற்கெனத் தனிப்பட்ட காகித வடிவிலான இணைப்பு ஒப்பந்தம் எதுவும் தேவைப்படாது என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

’ஹா் கா் திரங்கா’ இயக்கம்: சுயஉதவிக் குழுக்களிடமிருந்து 2 லட்சம் மூவா்ணக் கொடிகள் தில்லி அரசு கொள்முதல்

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தையில் ரூ.34.11 கோடிக்கு விற்பனை
மின்சாரம் பாய்ந்து மின் உதவியாளா் உயிரிழப்பு







