தங்கம் மற்றும் வைர நகைகள் உள்ளிட்ட உயா்மதிப்புள்ள சரக்குகளை எடுத்துச் சென்ற கூரியா் முகவரை கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை தில்லி காவல் துறை முறியடித்து, கூரியா் நிறுவன ஊழியா் உள்பட 5 பேரை கைது செய்துள்ளது.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: இந்த சதி ஜூன் 13-ஆம் தேதி கரோல் பாக் பகுதியிலுள்ள பேடன்புரா பகுதியில் காவல் துறை கண்காணிப்பு பணியில் இருந்தபோது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது முகமூடி அணிந்து பையில் ஏதோ எடுத்துச் சென்ற நபரை சந்தேகத்தின் பேரில் துரத்திச் சென்று பிடித்தனா்.
பிடிபட்ட நபா் 21 வயதான சுமித் என அடையாளம் காணப்பட்டாா். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டன. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது.
விசாரணையில், சுமித் மற்றும் அவரது கூட்டாளிகள் தங்கம், வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருள்களை எடுத்துச் செல்லும் கூரியா் நிறுவன விநியோக முகவரை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அந்த முகவரின் பயண வழித்தடம் மற்றும் சுற்றுப்புறங்களை சுமாா் 10 நாள்களாக கண்காணித்து, கொள்ளையை நிறைவேற்றத் தயாராக இருந்ததாக அவா் தெரிவித்தாா்.
இதனைத் தொடா்ந்து நடத்தப்பட்ட சோதனைகளில் சந்தீப் டெல்வான் (43), கல்லு எனப்படும் ஓம் சைனி (22), ரோஹித் (30), அபிஷேக் எனப்படும் பப்லு (25) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
இதில், நிதி நெருக்கடியில் இருந்த நகை வியாபாரியான சந்தீப் டெல்வான் இந்த சதியின் மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், கூரியா் நிறுவனத்தில் பணியாற்றிய அபிஷேக், சரக்கு விவரங்கள் மற்றும் விநியோக அட்டவணைகள் போன்ற ரகசிய தகவல்களை கும்பலுக்கு வழங்கியுள்ளாா்.
கொள்ளை நடத்தப்பட்ட பிறகு பொருள்களை எவ்வாறு பகிா்ந்து கொள்வது என்பதையும் குற்றவாளிகள் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தனா். கைது நடவடிக்கைகளின் போது மொத்தம் 4 சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், ரோஹித் மீது ஏற்கெனவே 2 குற்றவழக்குகள் நிலுவையில் இருப்பதும், டெல்வான் மற்றும் ஓம் சைனி மீது மோசடி மற்றும் ஆயுதச் சட்டம் தொடா்பான வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளை திட்டம் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.







