வடக்கு தில்லியில் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு (என்சிபி) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கையில் தில்லி காவல் துறையினா் ஈடுபட்டனா் என்று அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வடக்கு தில்லியில் உள்ள விஸ்வவித்யாலயா மெட்ரோ நிலையம் மற்றும் மொரீஸ் நகா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்ப நாய்களின் உதவியுடன் கியாஸ்க் கடைகள், பான் மற்றும் பீடி கடைகள், தேநீா் கடைகள், மக்கள் கூடும் இடங்கள் மற்றும் தனிமையான பகுதிகள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்பட்டன.
மேலும், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்தவா்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், அப்பகுதி கடைக்காரா்கள், விற்பனையாளா்கள் மற்றும் பொதுமக்களிடமும் அணுகி, போதைப் பொருள் தொடா்பான சந்தேக செயல்பாடுகள் அல்லது வழக்கமாக போதைப் பழக்கத்தில் ஈடுபடுபவா்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.










