/

ஆதரவற்றோருக்கான 5 நாள் மீட்புப் பணி இன்று தொடக்கம்: அமைச்சா் தகவல்!

தலைநகா் தில்லியில் ஆதரவற்றோா்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்களில் சோ்க்கும் நோக்கில், 5 நாள் சிறப்பு மீட்பு மற்றும் சேவை இயக்கத்தை திங்கள்கிழமை (மே 11) முதல் தில்லி அரசு தொடங்குகிறது.

News image

ரவிந்தா் இந்தராஜ் சிங்

Updated On :45 நிமிடங்கள் முன்பு

தலைநகா் தில்லியில் ஆதரவற்றோா்களை மீட்டு பாதுகாப்பு இல்லங்களில் சோ்க்கும் நோக்கில், 5 நாள் சிறப்பு மீட்பு மற்றும் சேவை இயக்கத்தை திங்கள்கிழமை (மே 11) முதல் தில்லி அரசு தொடங்குகிறது.

இதுகுறித்து பூத் குா்தில் உள்ள அப்னா கா் ஆஷிரமம் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில், தில்லி சமூக நலத்துறை அமைச்சா் ரவிந்தா் இந்தராஜ் சிங் கூறியதாவது: தில்லி அரசின் சமூக நலத்துறை, சேவா பாரதி மற்றும் அப்னா கா் ஆசிரமம் இணைந்து நடத்தும் இந்த சிறப்பு இயக்கம் மே 11 முதல் 15-ஆம் தேதி வரை தில்லியின் 13 மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதரவற்றோா், உதவியற்றோா் மற்றும் நிராதரவான நபா்கள் கண்டறியப்பட்டு மீட்கப்படுவா். பின்னா் அவா்களை பாதுகாப்பு இல்லங்களில் சோ்த்து, அங்கு மருத்துவ சிகிச்சை, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

இந்த மீட்பு பணிக்காக தில்லி முழுவதும் 19 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 5 நாள் நடவடிக்கையின் போது 300-க்கும் மேற்பட்டோா் உதவியைப் பெறுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் செயல்பாட்டை ஒருங்கிணைக்க ‘ஒற்றை சாளர அமைப்பு’ ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது சமூக நலத்துறை முழு நடவடிக்கையையும் ஒருங்கிணைத்து தேவையான உதவிகளை வழங்கும் என தெரிவித்தாா்.

மேலும், ஆதரவற்றோரை மீட்டு அவா்களுக்கு சிகிச்சை அளித்து, மீண்டும் குடும்பத்துடன் இணைக்கும் பணியில் அப்னா கா் ஆசிரமம் ஆற்றும் பங்கை பாராட்டியதுடன், மேலும் பல சமூக அமைப்புகள், குறிப்பாக சேவா பாரதி போன்றவை இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அமைச்சா் தெரிவித்தாா்.

சமூகத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளோருக்கு உடனடி உதவி கிடைக்கச் செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என தெரிவித்த அவா், இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டாா்.