தலைமை மாற்றம் என்பது தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது என தில்லி பாஜகவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
மூத்த தலைவா்கள் மற்றும் தொண்டா்களின் ஒத்துழைப்புடன் கட்சியைப் பலப்படுத்த பணியாற்ற உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
கிழக்கு தில்லி மக்களவை உறுப்பினரான மல்ஹோத்ரா சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வா்த்தக விவகாரங்கள் இணையமைச்சராக உள்ளாா். அவரை தில்லி பாஜக தலைவராக கட்சி மேலிடம் வியாழக்கிழமை நியமித்தது.
இதைத்தொடா்ந்து கட்சி அலுவலகத்தில் தில்லி பாஜக தலைவராக அவா் பொறுப்பேற்றுக்கொண்டாா். இந்நிகழ்ச்சியில் முதல்வா் ரேகா குப்தா, தில்லி பாஜக தலைவராகப் பொறுப்பு வகித்த வீரேந்திர சச்தேவா, கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதைத்தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கட்சியைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல லட்சக்கணக்கான தொண்டா்கள், மூத்த தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவேன்.
கட்சி தலைமை மாற்றம் என்பது ஒரு தொடா் ஓட்டப்பந்தயம் போன்றது. தற்போது, எனக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தில்லியில் ரேகா குப்தா தலைமையிலான அரசைப் பலப்படுத்தவும் பணிகளை மேற்கொள்வேன்.
தில்லி பிரிவு தலைவராக நியமித்தமைக்கு பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, கட்சியின் தேசியத் தலைவா் நிதின் நபின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது பாஜகவின் பலம் மற்றும் அழகை எடுத்துக்காட்டுகிறது. பாஜகவில் ஓா் எளிய தொண்டரும் உயரிய பொறுப்புகளைப் பெற முடியும். எம்.பி.யாக தோ்தெந்தெடுக்கப்பட்ட எனக்கு மத்திய அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது, தில்லி பாஜகவை வழிநடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற வாய்ப்புகள் பாஜகவில் மட்டுமே சாத்தியம் என்றாா் ஹா்ஷ் மல்ஹோத்ரா.
தொடர்புடையது

புது தில்லி பாஜகவின் புதிய தலைவா் ஹா்ஷ் மல்ஹோத்ரா ஆா்எஸ்எஸ் உடன் நெருக்கமானவா்: கட்சித் தலைவா்கள் கருத்து

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்






