சுரண்டை, நவ. 4: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணையதளம் மூலம் பதிவைப் புதுப்பிப்பதில் தற்போது சிக்கல் நிலவுகிறது.
இதனால் தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் தங்கள் பதிவைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் கடந்த செப்டம்பரில் வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டது. வேலைவாய்ப்பு தேடுவோர் ஆன்-லைன் மூலம் தங்கள் பதிவு, புதுப்பித்தலை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால் தற்போது பதிவு செய்வது எளிய நடைமுறையானது. இணையதளம் மூலம் கல்வித் தகுதியைப் பதிந்தவுடன் தாற்காலிகப் பதிவு எண் வழங்கப்படுகிறது.
அந்த எண்ணுடன் கல்விச் சான்றிதழ் நகல்களைச் சேர்த்து பதிவஞ்சல் மூலம் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அனுப்பினால், அங்கு சான்றிதழ் சரிபார்ப்புப் பணி முடிந்து ஒரு வாரத்துக்குள் நிரந்தரப் பதிவு எண் இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது. இதனால் பட்ட மேற்படிப்பு, தொழில்நுட்ப மற்றும் மருத்துவப் படிப்பு முடித்தோர் சென்னை மற்றும் மதுரை செல்வதும், பிற படிப்பு படித்தோர் அந்தந்த மாவட்டத் தலைநகருக்குச் செல்வதும் அவசியமற்றதானது.
அவரவர் இருக்கும் ஊரிலேயே பதிவை மேற்கொள்ள முடிகிறது. இதனால் பயணச் செலவு உள்பட பல சிரமங்கள் தவிர்க்கப்பட்டன.
ஆனால், ஏற்கெனவே வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்தோர் தங்கள் பதிவைப் புதுப்பிக்க வேலைவாய்ப்பு இணையதளத்தை அணுகினால், பதிவைப் புதுப்பிக்க இயலவில்லை.
வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் சென்றாலும், இணையதளம் மூலம் புதுப்பிக்குமாறு வற்புறுத்துவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரிடம் கேட்டபோது, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும் பதிந்து வைத்துள்ள 66 லட்சம் பேரின் விவரங்கள் அனைத்தும் சென்னை அலுவலகம் மூலம் இணையதளத்தில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அப் பணி முடிந்ததும்தான் இணையதளம் முலம் புதுப்பிக்க இயலும் என்றார்.
இணையதளத்தில் பதிவைப் புதுப்பிக்க இயலாத நிலையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்கெனவே உள்ள நடைமுறைப்படி புதுப்பித்தலை நேரிலோ, அஞ்சல் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்பதே பயனாளிகளின் இப்போதைய கோரிக்கை.