கோவில்பட்டி புதிய பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள்

 கோவில்பட்டி, செப். 29: கோவில்பட்டி புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை பேருந்துகள் புறக்கணிக்கின்றன. நான்குவழிச் சாலை பிரதான  சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதால் பயணி
Updated on
1 min read

 கோவில்பட்டி, செப். 29: கோவில்பட்டி புறவழிச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை பேருந்துகள் புறக்கணிக்கின்றன. நான்குவழிச் சாலை பிரதான  சாலையிலேயே பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதால் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

 தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி இரண்டாவது பெரிய நகரம். இங்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோவில்பட்டி புறவழிச் சாலையில் நகரின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, சேலம், கோவை, திருப்பூர், புதுவை போன்ற தொலைதூர நகரங்களுக்குச்  செல்லும் பேருந்துகள் இந்த புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 2007-ல் இந்த கூடுதல் பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியது. இதனால், நகருக்குள் உள்ள அண்ணா பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்தது. இதைக் கண்டித்து அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் பல்வேறு  போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, கோவில்பட்டியிலிருந்து புறப்படும்  அனைத்துப் பேருந்துகளும், கோவில்பட்டிக்கு வரும் அனைத்துப் பேருந்துகளும்  அண்ணா பேருந்து நிலையத்துக்குள் வந்து செல்லும் என்றும், மற்ற தொலைதூர நகரங்களிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்துக்கு  மட்டுமே வந்து செல்லும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால், அண்மைக்காலமாக திருநெல்வேலி, மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்துக்குள் செல்வதில்லை.  

மாறாக, நான்குவழிச் சாலையில் அமைந்துள்ள பிரதான சாலையில் பயணிகளை ஏற்றி,  இறக்கிச் செல்கின்றன. இதனால், பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வெளியிலேயே வெயிலிலும் மழையிலும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. பேருந்தில் ஏறும் அவசரத்தில் நான்குவழிச் சாலையைக் கடந்து செல்வதால் விபத்தில் சிக்கும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பகல் மற்றும் இரவு நேரங்களில் சர்வீஸ்  பஸ்களும் சரிவர இயக்கப்படவில்லை. இதனால், பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோவில்தான் செல்ல வேண்டியிருக்கிறது. ஆட்டோவுக்கு அதிக கட்டணம் கொடுக்க வழியில்லாதவர்கள் ஊருக்குள் நடந்தே செல்லலாம் என்றால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகர எல்லைக்கு வரும் இருபுறங்களிலும் மின்விளக்கு வசதி இல்லை.

 எனவே, புதிய பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் சென்றுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதிய பேருந்து நிலையத்திலிருந்து  நகருக்குள் வருவதற்கு போதிய சர்க்குலர் பஸ்களை இயக்க வேண்டும்; புதிய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா பேருந்து நிலையத்துக்கு வருவதற்கான ஆட்டோ  கட்டணத்தை அறிவிப்புப் பலகையில் எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com