கோவில்பட்டி, டிச. 5:இருக்கன்குடி நீர்த்தேக்கத்தில் பழுதடைந்த ஷட்டர்கள் வழியாக பெருமளவு நீர் வீணாக வெளியேறுவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஷட்டர்களை உடனடியாகச் சீரமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எட்டையபுரம், புதூர் வட்டாரங்களின் மேற்குப் பகுதியான அயன்ராசாப்பட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, மேலக்கரந்தை, கீழ்நாட்டுக்குறிச்சி, தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் உள்ளிட்ட 11 கிராமங்களில் உள்ள மானாவாரி நிலங்களை பாசன வசதி கொண்ட நிலங்களாக மாற்ற பல ஆண்டுகளுக்கு முன்பு வைப்பாற்றின் குறுக்கே அணை கட்ட அரசு திட்டமிட்டது.
அதன் செயல்வடிவமாக பெருமளவு நீர்வரத்து உள்ள இடத்தைக் கண்டறிந்து, வைப்பாறு, அர்ஜுனா நதிகள் சங்கமிக்கும் இடமான விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடியில் நீர்த்தேக்கம் கட்ட 2001-ல் தேசிய வேளாண் வளர்ச்சி வங்கி உதவியுடன் ரூ.80 கோடி திட்ட மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டது. அப்பணி 2006-ல் நிறைவடைந்தது.
இந்த நீர்த்தேக்கம் விருதுநகர் மாவட்டத்தில் கட்டப்பட்டிருந்தாலும், இதன் மொத்த பயனும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்கிறது. இருக்கன்குடியிலிருந்து வேம்பார் வரையிலான 120 ஆற்றுப் படுகை கிராமங்களின் குடிநீர்த் தேவையை இந்த நீர்த்தேக்கம் மூலம் தீர்க்கலாம்.இந்த நீர்த்தேக்கத்தில் முழுவதும் தண்ணீர் இருக்கும்பட்சத்தில் 200-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரும்.சுமார் 10,500 ஏக்கர் மானாவாரி விவசாய நிலங்களும், மறைமுகமாக 10 ஆயிரம் ஏக்கர் தோட்டப் பாசனங்களும் பயன் பெறும்.
அந்த வகையில், தற்போது பெய்துவரும் பருவமழையைப் பயன்படுத்தி, நீர்த்தேக்கத்தில் தண்ணீர் தேக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டையபுரம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.அதன் அடிப்படையில், நீர்த்தேக்கத்தில் உள்ள 21 ஷட்டர்களையும் அடைத்து, தண்ணீர் தேக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். 24 அடி கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத்தில் இப்போது 21 அடி தண்ணீர் உள்ளது.
இன்னும் மழைக் காலம் உள்ளதால், முழுவதும் நிரம்பிவிடும் என்ற நம்பிக்கையில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் உள்ளனர். ஆனால், நீர்த்தேக்கத்தின் ஷட்டர்கள் பழுதடைந்துள்ளதால், பெருமளவு தண்ணீர் வீணாக ஆற்றை நோக்கிச் செல்கிறது.
இந்நிலை நீடித்தால் ஒரு வார காலத்துக்குள் தண்ணீர் முழுவதும் வெளியேறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்துள்ள ஷட்டர்களை சீரமைத்து தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எட்டையபுரம் மற்றும் விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, மதிமுக மாநில விவசாய அணி துணைச் செயலர் அ.வரதராஜன், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.