/

போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத ஆலங்குளம் அரசு மருத்துவமனை

ஆலங்குளம், பிப். 5:  ஆலங்குளத்தில் உள்ள, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு,போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததா

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:15 am

வை. இராமச்சந்திரன்

ஆலங்குளம், பிப். 5:  ஆலங்குளத்தில் உள்ள, அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு,போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.

 ஆலங்குளம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமானது சுமார் 30 படுக்கைகள் கொண்டதாகும். இதன் கீழ் நெட்டூர், ஊத்துமலை ஆகிய கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன.

 ஆலங்குளம் சுகாதார நிலையம் சுமார் 2.15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ஆனால் 1963-ல் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மிகச் சிறிய கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. நாள்தோறும் சிகிச்சைக்கு வரும்,கூடுதல் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, இந்தக் கட்டடத்தில் வசதிகள் இல்லை.

  நோயாளிகள் உட்கார போதிய இடம் இல்லை. ஊசி போட அறை இல்லை. சீட்டு பெற்றுக் கொள்ள இடம் இல்லை. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடம் இல்லை.

 பொதுமக்கள் பயன்படுத்தத் தேவையான கழிப்பறை வசதி,குடிதண்ணீர் வசதி, இரவில் அச்சமின்றி தங்குவதற்குத் தேவையான மின்விளக்குகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. அதோடு சுற்றுப்புறத்தில் மிக மோசமான புதர்கள் நிறைந்து, விஷஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது.

 ஆலங்குளம் சுகாதார நிலையத்தில் ஒரு தலைமை மருத்துவர் உள்பட 5 மருத்துவர்கள் பணியில் இருக்க வேண்டும். ஒருவர் விடுமுறையில் இருக்கிறார். இப்போது இரண்டு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். அதிலும் ஒருவர் மாற்றுப் பணியிலோ அல்லது விடுமுறையிலோ இருந்து வருவதால் ஒரே ஒரு மருத்துவரைக் கொண்டுதான் பல நாள்கள் இந்த சுகாதார நிலையம் இயங்குகின்றன.

 ஆலங்குளம் மற்றும் நெட்டூர் சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு, அடிக்கடி வழங்கப்படும் மாற்றுப்பணி மூலம் இங்கு குழப்பம் தான் மேலோங்கி நிற்கிறது. இந்த 3 பணியிடங்கள் போக, மீதி இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அந்த மருத்துவர்கள் இதுவரை பணிக்கு வரவில்லை.

 ஆலங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பொறுத்தளவில், சராசரியாக தினந்தோறும் சிகிச்சைக்கு சுமார் 350 புறநோயாளிகள் வருகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதிகளுக்கான பரிசோதனை போன்றவை இருப்பதால் அன்றைய தினம் சுமார் 500 பேர் வரை வந்து செல்கின்றனர்.

 உள் நோயாளிகளாக மாதத்துக்கு சுமார் 100 பேர் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லாததால்  புறநோயாளிகள் மற்றும் உள் நோயாளிகள் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்கு வரும் போது மிகவும் சிரமம் அடைகின்றனர்.  மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.

 இருக்கும் செவிலியர்கள், துணைச் செவிலியர்களைக் கொண்டே பல பிரசவ கேஸ்கள் பார்க்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கூட ஆலங்குளம் சுகாதார நிலையத்தில் சராசரியாக மாதந்தோறும் 35 பிரசவங்கள் நடைபெறுகின்றன.

 அரசு செய்ய வேண்டியது:      சுகாதார நிலையத்தில் பொதுமக்கள் உட்கார்ந்து செல்லத் தேவையான இருக்கைகளும், குடிதண்ணீர் வசதியும், கழிப்பிட வசதிகளும், போதிய மின் விளக்குகள், கூடுதல் ஆழ்துளைக் கிணறு, தெருவில் இருந்து சுகாதார நிலையம் வரை தார்ச்சாலை போன்றவை அமைக்கப்பட வேண்டும்.

 பல் மருத்துவப்பிரிவில் நீண்ட நாள்களாக இயங்காமல் இருக்கும் இயந்திரத்துக்கு, தேவையான உபகரணங்களைப் பொருத்தி அதைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும். அதோடு சுகாதார நிலையத்துக்குத் தேவையான மேஜை,பெஞ்சு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.

 பயனற்ற நிலையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளை, சீரமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். பிரசவ வார்டு பகுதி உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் முள்புதர்கள் நிரம்பிக்கிடப்பதை சுத்தம் செய்து, நோயாளிகள் சுகாதாரமாக இருந்து செல்லும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.