நாகர்கோவில், ஜன.8:கூட்டுறவு சங்கங்களில் அமைக்கப்பட்டுள்ள வேளாண் சேவை மையங்களில் விவசாயிகள் வேளாண் உபகரணங்களைப் பெற்று பயன்பெறலாம் என்று மண்டல இணைப்பதிவாளர் ஆ.க. சிவமலர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக முதல்வர் அறிவித்துள்ளபடி கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 76 வேளாண் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மையங்களில் உழவு இயந்திரம், நெல் நாற்று நடும் இயந்திரம், சிறிய இழுப்பான், களை எடுக்கும் இயந்திரம், கைத்தெளிப்பான்கள், தென்னைமரம் ஏறும் கருவி, தேங்காய் உரிக்கும் கருவி மற்றும் விசைத்தெளிப்பான்கள், மண் மாதிரி எடுப்பதற்கு தேவையான ஆகர் கருவி ஆகியவையும், அந்தந்த மண்வாகு, சாகுபடி செய்யும் பயிரைப் பொறுத்து இதர வேளாண் கருவிகளை விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கவும், கடன் மூலம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேளாண்மை பொறியியல் துறையுடன் இணைந்து விவசாயத்துக்குத் தேவையான மினி டிராக்டர், பவர் டிரில்லர், விசைத் தெளிப்பான், நெல் நாற்று நடும் இயந்திரம் போன்ற வேளாண் உபகரணங்கள் மானிய விலையில் வேளாண் சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தை அணுகி அரசின் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் சிவமலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.