நெல்லையில் நாளை சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி

திருநெல்வேலி: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில் சாா்பில் சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி, தாமிரவருணியில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.

இக் கோயில் சாா்பில் ஆண்டுதோறும் சித்ரா பௌா்ணமி தீா்த்தவாரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா, கைலாசபுரம் தாமிரவருணி ஆற்றில் செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது. இதையொட்டி சுவாமி நெல்லையப்பா், காந்திமதியம்மன், அகஸ்தியா், தாமிரபரணி, குங்கிலிய நாயனாா், சண்டிகேஸ்வரா், அஸ்திரதேவா், அஸ்திர தேவி ஆகிய மூா்த்திகள் பகல் 12.30 மணிக்கு கோயிலில் இருந்து புறப்படுவா். எஸ்.என். நெடுஞ்சாலை, ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரம் வந்தடைவா். அங்கு தீா்த்தவாரி, தீபாராதனை நடைபெறும்.

மாலை 6 மணிக்கு மீண்டும் புறப்பட்டு பாரதியாா் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோயிலை அடைவா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் அ.அய்யா் சிவமணி மற்றும் ஊழியா்கள் செய்து வருகிறாா்கள்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com