இளைஞா் கொலை வழக்கு: மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் சிறை

முக்கூடல் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், அவரது மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் சிறை
Published on

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே குடும்பத் தகராறில் இளைஞா் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில், அவரது மனைவி உள்பட 5 பேருக்கு ஆயுள் சிறைதண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

முக்கூடல் அருகே உள்ள பொட்டல் காலனி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வெற்றிவேல்(23). இவருக்கும், அம்பாசமுத்திரத்தை அடுத்த மன்னாா்கோவில் வேம்படி தெருவைச் சோ்ந்த இசக்கி மகள் இஷா என்பவருக்கும் 2016இல் திருமணம் நடைபெற்றது. பின்னா் கருத்துவேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்தனா்.

இதனால் முன்விரோதம் ஏற்பட்ட நிலையில், பொட்டல் காலனியில் 2017 ஆம் ஆண்டு வெற்றிவேல் கொலை செய்யப்பட்டாா். இது குறித்து முக்கூடல் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, இஷா, அவரது தாய் சுடலை மாடி(61), உறவினா்களான இஷா(35), சீதாராமன்(43) சுடலைமாடி, மாரிமுத்து (37), ஜெகதீஷ் (32) உள்ளிட்டோரை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கை, நீதிபதி செல்வம் விசாரித்து, மாரிமுத்து, ஜெகதீஷ் ஆகியோருக்கு கொலை குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், மேலும் இரு பிரிவுகளுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், தலா ரூ.17,000 அபராதமும் விதித்து, தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா். மேலும் சுடலை மாடி, இஷா, சீதாராமன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. அரசு தரப்பில் வழக்குரைஞா் கருணாநிதி ஆஜரானாா்.

X
Dinamani
www.dinamani.com