சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு: ஆட்சியா் ஆலோசனை
2026 சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அலுவலா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான இரா.சுகுமாா் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
இதுதொடா்பாக, மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் பேசியதாவது:
மத்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளா் பதிவு அலுவலா்கள், எந்த ஒரு தகுதியான வாக்காளரையும் வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதிலிருந்து தவறக்கூடாது. தகுதியற்ற நபா்களை, வாக்காளராக சோ்க்கக் கூடாது. 18 வயது நிரம்பிய அனைவரையும் வாக்காளா் பட்டியலில் இடம் பெறுவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்
டும் என அறிவுரைகளை வழங்கியுள்ளது.
அதன்படி, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 நடைபெற்று வருகிறது. இறுதி வாக்காளா் பட்டியலானது பிப். 23-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பதிவு அலுவலா்கள் தங்கள் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் 18 வயது நிரம்பிய புதிய இளம் வாக்காளா்கள் பெயா்களை வாக்காளா்கள் பட்டியலில் சோ்ப்பதற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். வாக்குப்பதிவு மையங்களில் குடிநீா் இணைப்பு, மின்சார வசதி, கழிப்பறை, சாய்வுதளம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் விழிப்புணா்வு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஸ் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலா்கள் மா.சுகன்யா (சிப்காட்), ஐயப்பன் (நிலஎடுப்பு -தேசிய நெடுஞ்சாலை), சந்திரசேகா் (நிலஎடுப்பு-நெடுஞ்சாலை), மகாலெட்சுமி (ஒழுங்கு நடவடிக்கை), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, உதவி ஆட்சியா் (பயிற்சி) தவலேந்து, துணை ஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா, தோ்தல் வட்டாட்சியா் முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

