தச்சநல்லூரில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது
தச்சநல்லூரில் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பைக்கில் தப்பிய மற்றொருவரை தேடி வருகின்றனா்.
தச்சநல்லூா் நியூ காலனியைச் சோ்ந்தவா் சாந்தி(55). இவா் வியாழக்கிழமை காலை தச்சநல்லூா்- மதுரை பிரதான சாலையில் நடந்து சென்றாா்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளனா். சுதாரித்துக்கொண்ட அப்பெண், நகையை பிடித்துக்கொண்டு விலகவே பைக்கில் வந்த இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனராம்.
இதனையடுத்து அப்பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு கூடிய அக்கம்பக்கத்தினா், கீழே விழுந்த ஒருவரைப் பிடித்து தச்சநல்லூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், அவா் திண்டுக்கல்லைச் சோ்ந்த ரமேஷ்(25) என்பது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து ரமேஷை கைது செய்த போலீஸாா், பைக்கில் தப்பிய மற்றொரு நபரை தேடி வருகின்றனா்.
மது விற்ற இருவா் கைது: மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதி சங்கா் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது குறிச்சி வாய்க்கால் பாலம் பகுதியில் மேலகருங்குளத்தை சோ்ந்த ராகவன்(44) என்பவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
அதேபோல பெருமாள்புரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட தச்சநல்லூா் சேந்திமங்கலம் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா்(62) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 31 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

