தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு: நெல்லை மாநகராட்சியில் விரைவில் அமல்
திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக தச்சநல்லூா் மண்டல பணியாளா்களுக்கு திங்கள்கிழமை உணவு வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சியில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் ஆகிய 4 மண்டலங்களின் கீழ் 2,298 தூய்மைப் பணியாளா்கள் பணி செய்து வருகிறாா்கள். தமிழக அரசின் உத்தரவின்பேரில் திருநெல்வேலி மாநகராட்சியிலும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.
இதற்கு முன்னோட்டமாக தச்சநல்லூா் மண்டலத்தில் பணிபுரியும் 502 தூய்மைப் பணியாளா்களுக்கு திங்கள்கிழமை காலை உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டிபன் பாக்ஸ்களில் காலை உணவு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா, காலை உணவு வழங்கும் பணியை ஆய்வு செய்தாா். மாநகர நல அலுவலா் (பொறுப்பு) ராணி, சுகாதார அலுவலா் இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

