கன்னியாகுமரி மாவட்டத்தில் 15.12 லட்சம் வாக்காளர்கள்: ஆட்சியர் தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841  வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
Updated on
2 min read

கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 லட்சத்து 12 ஆயிரத்து 841  வாக்காளர்கள் உள்ளனர் என்றார் மாவட்ட ஆட்சியர்  சஜ்ஜன்சிங் ரா.சவாண்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து,  ஆட்சியர் அலுவலகத்தில், புதன்கிழமை நடைபெற்ற  அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்துக்கு,  தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:
கன்னியாகுமரி மாவட்டத்தில்,   சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1.10.2017 முதல் 31.10.2017 வரை நடைபெற்றது.  மேலும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 8.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய தினங்களில்,  சிறப்பு முகாம்கள்  நடைபெற்றது.  மேலும், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும்,  நகராட்சி அலுவலகங்களிலும் 30.11.2017 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு,  நீக்கம் செய்ய,  திருத்தம் செய்ய பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும்.
நவ.15  ஆம் தேதி முதல்  வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு,  வீடாக சென்று  சிறப்பு சுருக்கமுறை  திருத்தத்திற்கான விசாரணை மேற்கொள்வார்கள்.  இப்பணியின்போது, 1.1.2000 தகுதிநாளாக கொண்ட 18 வயது  நிரம்பிய பெயர் பதிவு செய்ய,  விடுபட்ட,  புதிய இளம் வாக்காளர்களை,  வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், குறிப்பிட்ட பாகத்திலிருந்து இடம் பெயர்ந்த,  இறந்த மற்றும் திருமணமாகி வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த  பெண்கள்,  6 மாதங்களுக்கு மேல், தொடர்ந்து குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத  நபர்கள் ஆகியோரை வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கம் செய்யும் பணியினை  மேற்கொள்வர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில்,  தொடர் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொண்டு,  3.10.2017 அன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 15  லட்சத்து ,12  ஆயிரத்து 841 வாக்காளர்கள் உள்ளனர்.  அதைத்   தொடர்ந்து நடைபெற்ற, சிறப்பு முகாம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள் போன்ற இடங்களில், பொதுமக்களிடமிருந்து இதுவரை வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கு 16,576 பேரும், 37,619 பேர் பெயர் நீக்கம் செய்வதற்காகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
தற்போது, விண்ணப்பித்தவர்களின் தகுதியுடைய விண்ணப்பங்கள் உரிய விசாரணைக்கு பின்னர்,  சேர்க்கப்பட்டு, 5.01.2018 அன்று வெளியிடப்படவுள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெறும்.
புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள், வாக்காளர் பட்டியல் பாகம் வரிசை எண் விவரங்களுடன்,   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இ சேவை மையம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள அரசு இ சேவை மையம் மூலம், நேரிலோ அல்லது அவர்களது உறவுமுறை குடும்ப  உறுப்பினர்கள் உரிய ஆதாரத்தை சமர்ப்பித்து, இலவசமாக வண்ண புகைப்பட அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட அல்லது புதிய அடையாள அட்டை வேண்டுபவர்கள், வாக்காளர் பட்டியலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பார்வையிட்டு, உரிய விவரங்களுடன் ரூ. 25   கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்  என்றார்அவர்.
இக் கூட்டத்தில்,  மாவட்ட வருவாய் அலுவலர் சோ. இளங்கோ,  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா,   ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு,  அதிமுக  சார்பில் எம்.சந்திரன்,  திமுக சார்பில்  பி.லீனஸ்ராஜ், காங்கிரஸ் சார்பில்  பி. சேகர்,  சி.பி.ஐ (எம்)  சார்பில் என்.எஸ்.கண்ணன்,  தேசியவாத காங்கிரஸ்  சார்பில் பி.செல்வம்,   தேர்தல்  தனி வட்டாட்சியர் சுப்பிரமணியன், அகஸ்தீசுவரம் வட்டாட்சியர் எம்.வி. சஜீத்,  கல்குளம் வட்டாட்சியர் (பொ)  ஒய். குமாரதாஸ்,  துணை வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன்  உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com