குளச்சல் நகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனே அகற்றக்கோரி பொதுமக்கள், நகராட்சி அலுவலகத்தை , புதன்கிழமை முற்றுகையிட்டனர். மேலும் வர்த்தகர்கள் கடையடைப்பு நடத்தினர்.
குமரி மாவட்டத்தின் முக்கிய நகர பகுதியான குளச்சலில் தேங்கும் குப்பைகள், களிமார் உப்பளம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கொட்டப்பட்டு வந்தது.
இதற்கு அப்பகுதிகளில் குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், குப்பை வாகனங்களை சிறைபிடித்தும் போராட்டம் நடத்தியதால் அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.
இதற்கு மாற்றாக குப்பை கிடங்கிற்கு உரிய இடம் இல்லாத நிலையில் நகராட்சி வாகனங்கள் குப்பைகளுடன் குளச்சல் நகரப் பகுதிகளில் நின்றன. இதே போல் முக்கிய தெருக்கள், மக்கள் நடமாடும் பகுதிகளில் பல மாதங்களாக தேங்கிய குப்பைகளால் சுகாதாரச் சீர்கேடு நிலவியது.
இதைக் கண்டித்து, குளச்சலில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இப்போராட்டத்திற்கு சதீஷ்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் நகராட்சி தலைவர் நசீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் முருகேசன், முன்னாள் எம்.பி. பெல்லார்மின், காங்கிரஸ் கிழக்கு மாவட்டத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து குளச்சல் உதவி காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டு, போராட்டக்குழுவிடம் நகராட்சி பொறியாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பேசி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.