18 வயதுக்கு குறைவானவர்கள் இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றாகும் என்றார் நாகர்கோவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன்.
நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை சார்பில் தலைக்கவசம் உயிர் கவசம் என்ற தலைப்பில் வடசேரி எஸ்.எம்.ஆர்.வி. பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமுக்கு தலைமை வகித்து அவர் மேலும்பேசியது:
மாணவர்கள் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலையின் இருபுறமும் பார்த்து, கவனமாக கடக்க வேண்டும். 16 வயதில் இருசக்கர வாகனம் ஓட்டுவது சட்டத்துக்கு புறம்பானது. அவ்வாறு ஓட்டும்போது அசம்பாவிதம் ஏதாவது நேரிட்டால் அவர்களுக்கு எந்த வித இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது. அந்த சம்பவம் மிகப்பெரிய குற்றமாக கருதப்படும்.
18 வயது ஆனதும் ஓட்டுநர் உரிமம் பெற்றுதான் இருசக்கர வாகனம் ஓட்ட வேண்டும். வீட்டில் சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் தலைக்கவசம் அணிவது குறித்து தெரிவிக்க வேண்டும், தலைக்கவசம் அணிந்து சென்றால் விபத்தில் இருந்து தப்பலாம். வாகனம் ஓட்டுபவர்கள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்துப் பிரிவு ஆய்வாளர் அருள் ஜான் ஒய்சிலி ராஜ் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியில் தலைக்கவசம் அணியாமல் செல்லிடப்பேசியில் பேசியபடி வந்த ஒருவர் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறி கீழே விழுவதுபோன்றும், அவருக்கு தலையில் அடிபட்டு ஆம்புலன்ஸ் வந்து அதிலுள்ள மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்றும் நடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் போக்குவரத்து பிரிவு உதவி ஆய்வாளர் செந்தில்வேல், பள்ளித் தலைமை ஆசிரியர் நாகம்மாள் உள்ளிட்ட பலர்
கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.