தக்கலை அருகே கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்கள் வந்த வேனையும் சேதப்படுத்தியது தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்நகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக குழித்துறை கழுவன்திட்டை பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் தொண்டர்கள் சரத் (32), சசி, ஜஸ்டின்ராஜ் மற்றும் 5 பெண்கள் உள்பட 8 பேர் ஒரு வேனில் வந்தனர். பின்னர் மாநாடு நிறைவு பெற்ற பின்னர் சனிக்கிழமை இரவு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
வேனில் இருந்தவர்கள் தங்களிடமிருந்த இசைக்கருவிகளை இசைத்தபடி சென்றனராம். இரவு 9.30 மணி அளவில் அவர்கள் சென்ற வேன் சுவாமியார்மடத்தை அடுத்த மஞ்சாடி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் இரும்புக்கம்பி மற்றும் கட்டையால் வேனை தாக்கினராம். மேலும் வேனில் இருந்த சரத், சசி மற்றும் வேன் ஓட்டுநர் சிபின் ஆகியோரையும் அந்தக் கும்பல் தாக்கினராம். காயமடைந்த 3 பேரும் தக்கலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலறிந்து வந்த தக்கலை போலீஸார் தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் மஞ்சாடி பகுதியைச் சேர்ந்த சுனில், ரூபின், அபின் என்பது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.