கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே வேன் ஓட்டுநர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் இருவர் புதன்கிழமை சரணடைந்தனர்.
தக்கலை அருகேயுள்ள சரல்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்டின்ராஜ் (35), வேன் ஓட்டுநர். இவரது மனைவி சுலோச்சனா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஜெஸ்டின்ராஜ் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம்கொண்டு, அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டாராம். இது தொடர்பாக, அவர் மீது கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் சுலோச்சனா புகார் அளித்தார். தம்பதியை போலீஸார் செவ்வாய்க்கிழமை அழைத்து சமரப்படுத்தி அனுப்பிவைத்தனர். தன் மீது மனைவி புகார் கொடுத்ததற்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ரத்தினதாஸ் (65), அவரது மருமகன் ஜெபசிங் (34) ஆகியோர்தான் காரணம் எனக் கருதி, அவர்களுடன் ஜெஸ்டின்ராஜ் தகராறு செய்தாராம்.
அப்போது ரத்தினதாஸும், ஜெபசிங்கும் சேர்ந்து ஜெஸ்டின்ராஜை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீஸார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து ரத்தினதாஸையும், ஜெபசிங்கையும் தேடிவந்தனர். இந்நிலையில், இருவரும் கொற்றிக்கோடு காவல் நிலையத்தில் புதன்கிழமை சரணடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







