கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை சந்திப்பில் உள்ள டாஸ்மாக் கடையை தற்காலிகமாக மூட வலியுறுத்தி புதுக்கடை பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க சார்பில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இனயம், தூத்தூர், நித்திரவிளை , நடைக்காவு உள்ளிட்ட பகுதிகளில் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள மதுபிரியர்கள் புதுக்கடை சந்திப்பில் உள்ள மதுக்கடைக்கு கூட்டமாக வருகின்றனர். இதனால் இப்பகுதியில் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என கூறி பா.ஜ.க.வினர் இந்த டாஸ் மாக் கடையை தற்காலிக மாக மூட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் இந்நாள் வரை டாஸ்மாக் கடையை மூட எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு கிள்ளியூர் ஒன்றிய பா.ஜ.க தலைவர் குமார் தலைமை வகித்தார். பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் சந்திரகுமார் முன்னிலை வகித்தார்.
பா.ஜ.க மாவட்ட தலைவர் தர்மராஜ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், முன் சிறை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ராஜேஸ்வரி, பைங்குளம் ஊராட்சி தலைவர் விஜயராணி, மோகன் குமர், செளந்தர்ராஜன், சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.