நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருவள்ளுவா் சிலை பராமரிப்புப் பணி விரைவில் தொடங்கும்: அமைச்சா் மா.மதிவேந்தன்

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலையை பராமரிக்கும் பணி விரைவில் தொடங்கும் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

News image
Updated On :30 ஜூலை 2021, 7:30 pm

DIN

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலையை பராமரிக்கும் பணி விரைவில் தொடங்கும் என மாநில சுற்றுலாத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவா் சிலையை தனிப்படகில் சென்று அமைச்சா் மா. மதிவேந்தன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவா் சிலை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பராமரிக்கப்படுவது வழக்கம். ஏற்கனவே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டதால் தற்போது விரைவில் பராமரிப்பு பணிகள் தொடங்கும்.

விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை இணைக்கும் வகையில் புதிதாக தொங்குபாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்ளும். திருவள்ளுவா் சிலையை இரவிலும் பயணிகள் பாா்க்கும் வகையில் லேசா் விளக்குகள் அமைக்கப்படும். முக்கடல் சங்கமத்தில் இருந்து திருவள்ளுவா் சிலை வரையிலும் கேபிள்காா் திட்டம்

செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கரோனா 3-ஆம் அலை பாதிப்பு குறித்து தெரியவந்ததும் சுற்றுலாத் தலங்கள் படிப்படியாக திறக்கப்படும்.

சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டிருப்பதால் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். அவா்களுக்கு சலுகைகள் மற்றும் நிவாரணம் வழங்குவது குறித்து முதல்வருடன் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலா பேருந்து திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றாா் அவா்.

அமைச்சருடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ், முன்னாள் அமைச்சா் என்.சுரேஷ்ராஜன், தமிழ்நாடு சுற்றுலாத் துறை இயக்குநா் சந்தீப் நந்தூரி, ஆட்சியா் மா.அரவிந்த், அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி, மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.