நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மாசி பெருந்திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் மாசி பெருந்திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
9 ஆம் திருவிழா நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலை 5 மணிக்கு வெள்ளி குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தடம் பார்க்க எழுந்தருளினார். காலை 8 மணிக்கு தேரோட்ட நிகழ்விற்காக திருக்கோயிலில் இருந்து அழகம்மனும் சுந்தரேஸ்வரரும் சிறப்பு மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். இதைத் தொடர்ந்து தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது.
விநாயகர் தேரை சிறுவர், சிறுமிகளும், சுவாமி அம்பாள் தேரை பெண்களும் இழுத்தனர். இதில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்கள் அக்சயா கண்ணன், கோபால சுப்பிரமணியன், அருள்மிகு அழகம்மன் சமேத ஶ்ரீ சுந்தரேஸ்வரர் வழிபாட்டு அறக்கட்டளை தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் சீனிவாச சங்கர், அதிமுக பகுதி செயலாளர் கே.எல்.எஸ்.ஜெயகோபால் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர் மோர் உள்ளிட்ட குளிரபானங்களும் அன்னதானமும் வழங்கப்பட்டது.