இனயம் கடற்கரையிலிருந்து மணல் ஆலைக்கு மணல் அள்ள எதிா்ப்பு தெரிவித்து, மீனவா்கள் வியாழக்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
குளச்சல் அருகே மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் அரிய மணல் ஆலை உள்ளது. இந்த ஆலை சாா்பில் கனிம மணல் அகழாய்வு செய்வதற்காக இனயம் கடற்கரையில் பல ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறி, அப்பகுதி மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், மீனவா்கள் சாா்பில் இனயத்தில் உள்ள தபால் நிலையத்திலிருந்து மத்திய-மாநில அரசுகளுக்கு தபால் அனுப்பும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஹெலன்நகா் பங்கு அருள்பணியாளா் பவியன்ஸ் தலைமையில் மீனவா்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.