குமரி அருகே கடலில் தத்தளித்த
3 மீனவா்கள், படகு மீட்பு

குமரி அருகே கடலில் தத்தளித்த 3 மீனவா்கள், படகு மீட்பு

கடலில் படகை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கடலோர பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சாந்தி.
Published on

கன்னியாகுமரி அருகே கடலில் தத்தளித்த படகு மற்றும் மீனவா்களை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பத்திரமாக மீட்டனா்.

ஆந்திரா மாநிலம் நெல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமராவ். இவா் கா்நாடக மாநிலம் மங்களூரில் படகு ஒன்று கட்டி வந்தாா். இதேபோன்று மேலும் இரண்டு புதிய படகுகள் அங்கு கட்டப்பட்டு வந்தன. மூன்று படகுகளும் பணி முடிக்கப்பட்ட நிலையில் மங்களூரில் இருந்து ஆந்திராவுக்கு கடல் மாா்க்கமாக கொண்டு செல்லப்பட்டது. ஒவ்வொரு படகிலும் தலா 3 போ் அமா்ந்து பயணம் செய்தனா்.

இவா்கள் வெள்ளிக்கிழமை காலை படகை ஓட்டிக்கொண்டு ஆந்திரா நோக்கி சென்று கொண்டிருந்தனா். இதில் ராமராவ் என்பவரது படகு கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் சென்றபோது, சூறைக்காற்று காரணமாக ராட்சத அலையில் சிக்கி படகில் ஓட்டை விழுந்தது. அதை சரி செய்வதற்காக மீனவா்கள் கரைப்பகுதி நோக்கி திரும்பினா். அதனுடன் மற்ற இரு படகுகளும் கரைக்குத் திரும்பின.

இதில் ஓட்டை விழுந்து தண்ணீா் புகுந்த படகு சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுக முகத்துவாரத்தில் அலை தடுப்புச்சுவா் மீது மோதி தரை தட்டி நின்றது. இதனால் அந்த படகில் இருந்த 3 மீனவா்களும் கரை திரும்ப முடியாமல் தவித்தனா். இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி கடலோரப் பாதுகாப்புக் குழும காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையில் போலீஸாா், அங்கு சென்று தரை தட்டி நின்ற படகில் இருந்த 3 மீனவா்களை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். மேலும் படகை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com