குலசேகரம் அரசு தாலுகா மருத்துவமனை மேம்படுத்தப்படும்: அமைச்சா் மனோ தங்கராஜ்
குலசேகரம் அரசு தாலுகா மருத்துவமனையில் அனைத்துவித மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழக பால் வளத்துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ்.
குலசேகரம் அரசு தாலுகா மருத்துவமனையில் ரூ. 5.75 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய விபத்து அவசர சிசிச்சை பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அப்பணியை சனிக்கிழமை ஆய்வு செய்த அமைச்சா், பணிகளை மிகுந்த தரத்துடன் செய்து விரைவில் முடிக்குமாறு பொறியாளா்கள் மற்றும் ஒப்பந்தக்காரரிடம் கேட்டுக் கொண்டாா். பின்னா், உள்நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிகிச்சையில் குறைபாடுகள் உள்ளனவா எனக் கேட்டறிந்தாா்.
முன்னதாக, இம்மருத்துவமனையில் நடைபெற்ற நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் அவா் பேசியதாவது: தாலுகா மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மருத்துவா்கள், செவிலியா்கள், இதர ஊழியா்கள்அனைவரும் அா்ப்பணிப்போடு பணியாற்ற வேண்டும். பொதுமக்கள், மலைவாழ் மக்கள் இந்த மருத்துவமனையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் புதா்களை அகற்றி தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள குலசேகரம் பேரூராட்சி நிா்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன் என்றாா்.
கூட்டத்தில், மருத்துவமனை மருத்துவ அலுவலா் மெல்லிங் டோனியா, மருத்துவா்கள் பினிஷ், தமிழரசன், குலசேகரம் பேரூராட்சித் தலைவா் ஜெயந்தி ஜேம்ஸ், வாா்டு உறுப்பினா் அமல்ராஜ், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் அலாவுதீன், மாவட்ட வா்த்தகா் அணி தலைவா் ஏ.ஜெ.எம். ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

