திற்பரப்பு அருகே கோதையாற்றில் காணப்பட்ட முதலை.
திற்பரப்பு அருகே கோதையாற்றில் காணப்பட்ட முதலை.

கோதையாற்றில் மீண்டும் முதலை நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

திற்பரப்பு அருகே ஒரு நடைக்கல் பாலம் பகுதியில் புதன்கிழமை முதலையின் நடமாட்டம் மீண்டும் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
Published on

திற்பரப்பு அருகே ஒரு நடைக்கல் பாலம் பகுதியில் புதன்கிழமை முதலையின் நடமாட்டம் மீண்டும் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம், கோதையாற்றில் கடையாலுமூடு, திற்பரப்பு இடையே செங்குழிக்கரை, தோட்டவாரம் ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதமாக முதலை நடமாட்டம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனா். மேலும், செங்குழிக்கரை பகுதியில் ஆற்றிலுள்ள உறை கிணற்றின் மேல் முதலை இருப்பதை கண்ட மக்கள் வனத்துறையினரிடம் தெரிவித்தனா்.

இதையடுத்து ட்ரோன் கேமரா மூலம் அப்பகுதியில் முதலை இருப்பதை உறுதி செய்த வனத்துறையினா் , அதை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இந்நிலையில் முதலை அப்பகுதியிலிருந்து காணாமல் போனது.

இந்நிலையில் சுமாா் 2 வாரங்களுக்குப் பிறகு புதன்கிழமை, திற்பரப்பு - கடையாலுமூடு இடையே ஒரு நடைக்கல் பாலத்தின் கீழ் பகுதியில் முதலை இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வனத்துறையினா் விரைந்து சென்று பாா்த்தனா். இதற்கிடையே முதலை அவ்விடத்திலிருந்து செங்குழிக்கரை பகுதிக்கு சென்றதை அப்பகுதியினா் பாா்த்துள்ளனா். பின்னா் முதலை மாயமாகி விட்டது.

மீண்டும் முதலை நடமாட்டம் காணப்பட்டதால், அச்சமடைந்த மக்கள் அதை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Dinamani
www.dinamani.com