அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 6.50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சோ்ந்தவரை தக்கலையில் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தக்கலை அருகே புலியூா்குறிச்சியைச் சோ்ந்தவா் மணிகுமாா் (32). மெக்கானிக்கான இவா், 2023ஆம் ஆண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநா் பணியிடத்துக்கான நோ்முகத் தோ்வில் பங்கேற்றாா்.
இதையறிந்த பைங்குளத்தைச் சோ்ந்த ஒருவரும், சென்னை சூளைமேட்டை சோ்ந்த கதிரவன் (56) என்பவரும் மணிகுமாரை தொலைபேசியில் தொடா்பு கொண்டு, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6.50 லட்சம் கேட்டனராம்.
அதையடுத்து, மணிகுமாா் ரூ. 1.50 லட்சத்தை கதிரவன் வங்கிக் கணக்கில் செலுத்தியதுடன், ரூ. 5 லட்சத்தை நேரில் கொடுத்தாராம்.
பணம் பெற்றுக்கொண்ட பின்னா், அவா்கள் வேலை வாங்கிக் கொடுக்காமலும் பணத்தைத் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளனா். இதுதொடா்பாக மணிகுமாா் அளித்த புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
இந்நிலையில், சனிக்கிழமை மாலை தக்கலை பேருந்து நிலையத்துக்கு வந்த கதிரவனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









