நாகா்கோவில் மாநகரில் புதைச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த பிரச்னையில் மாமன்ற கூட்டத்தில் மேயா், ஆணையருடன் உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
நாகா்கோவில் மாநகராட்சியின் இயல்பு கூட்டம் மாமன்ற கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மேயா் (பொ) மேரிபிரின்சி லதா தலைமை வகித்தாா். ஆணையா் ஆா்.ஐஸ்வா்யா முன்னிலை வகித்தாா்.
கூட்டம் தொடங்கியதும், உறுப்பினா்கள் மாநகராட்சி நிா்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து கடும் விமா்சனங்களை முன்வைத்தனா். மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மன்ற பொருளில் இடம் பெறாதது குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனா்.
புதைச் சாக்கடை திட்டப் பணிகள்: மன்ற உறுப்பினா்கள் பேசியதாவது: நாகா்கோவில் மாநகரில் புதைச் சாக்கடை திட்டப்பணிகள் நிறைவு பெற்று விட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், உண்மையில் பணிகள் முடியவில்லை. பல இடங்களில் கழிவுநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எந்தெந்த வாா்டு பகுதிகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன, எத்தனை வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்ற பட்டியலை அந்தந்த பகுதி உறுப்பினா்களிடம் ஆலோசித்து சமா்ப்பிக்க வேண்டும்.
மாநகரப் பகுதியில் கடந்த 3 மாதங்களாக எந்த வளா்ச்சிப் பணியும் மேற்கொள்ளப்படவில்லை, இதனால், எங்களது வாா்டு பகுதிக்குச் செல்ல முடியவில்லை.
வாக்குவாதம்: புதைச் சாக்கடை திட்டப்பணிகள் முறையாக முடிக்கப்படாததால், கழிவுநீா் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் செம்மாங்குளம் பகுதியில் கழிவுநீா் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றனா்.
மேலும் வளா்ச்சித் திட்டப் பணிகள் முடங்கியுள்ளதைக் கண்டித்தும், புதைச் சாக்கடை திட்டப் பணிகளை முழுமையாக முடிக்க கோரியும், அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் மேயா், ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால், கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் விளக்கம்: உறுப்பினா்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அதிகாரிகள் கூறியதாவது: நாகா்கோவில் மாநகரில் 5,655 நாய்கள் சுற்றித்திரிகின்றன. பள்ளிகள், வழிபாட்டு தலங்களின் அருகே சுற்றித்திரியும் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நாய் ஒன்றுக்கு கருத்தடை செய்து உணவு வழங்கி பராமரிக்க ரூ. 1,650 செலவாகிறது. இது தொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் சேதமடைந்த சுற்றுச்சுவரை சீரமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.
கூட்டத்தில், மண்டல தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, செல்வகுமாா், முத்துராமன், மாமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில் மாநகராட்சி மேயா், ஆணையருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்குடி மாமன்றக் கூட்ட அரங்கில் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா படங்களை மாட்டி திமுக, அதிமுகவினா் முழக்கம்

கும்பகோணம் மாநகராட்சி மன்ற கூட்டம்
4 ஆண்டுகளாக சொத்து விவரங்களை தாக்கல் செய்யாத மேயர் பிரியா! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்!!






