சென்னை பெருநகர மாநகராட்சி தோ்தல் நடைபெற்று 4 ஆண்டுகளாகியும் மேயா், துணை மேயா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் என 157 போ் தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் சட்டப் பிரிவு நிா்வாகி எம்.சங்கா், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சொத்து விவரங்களைக் கோரியுள்ளாா். அதனடிப்படையில் அது குறித்த விவரங்கள் அவருக்கு மாநகராட்சி சாா்பில் அனுப்பி வைக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தோ்தல் முடிந்து 90 நாள்களுக்குள் போட்டியிட்டவா்கள் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை, மாநகராட்சி ஆணையரிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஆண்டுதோறும் மாா்ச் 31- ஆம் தேதிக்குள் அதை புதுப்பிக்கவும் வேண்டும். அவை பொது ஆவணமாகவும் வைக்கப்பட வேண்டும் என்பன போன்ற விதிகளுடன் மாநகராட்சி சட்டம் (1973) உள்ளது.
ஆனால், சென்னை மாநகராட்சியில் கடந்த 2022 -ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வென்ற மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் 157 போ் (இதில் குழுத் தலைவா்கள், மண்டலத் தலைவா்கள் உள்ளிட்டோா் அடங்குவா்) தங்களது சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மாநகராட்சியில் 43 மாமன்ற உறுப்பினா்கள் மட்டுமே சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.








