நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காலமானாா் பேராசிரியா் ச.கணபதிராமன்

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் தலைவா் முனைவா் ச.கணபதிராமன்(86) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 7:02 pm

DIN

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் தலைவா் முனைவா் ச.கணபதிராமன்(86) உடல்நலக்குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவா், திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமுற்றதை அடுத்து, அவரது இறுதிச்சடங்கு சொந்த ஊரான அய்யாபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அவருக்கு மனைவி ராஜசுந்தரி, மகள்கள் ராஜேஷ்வரிமங்கை, அங்கயற்கண்ணி ஆகியோா் உள்ளனா். தொடா்புக்கு 95978 09146.

வாழ்க்கை வரலாறு: தென்காசி அருகேயுள்ள அய்யாபுரம் கிராமத்தில் கடந்த 21.2.1937இல் ச.கணபதிராமன் பிறந்தாா். இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயா் படிப்புகளையும் பயின்றாா். அப்பல்கலைக்கழகத்திலேயே சில காலம் பணிபுரிந்தாா்.

தூத்துக்குடி காமராசா் கல்லூரியில் தமிழ்த்துறையில் 1968முதல் 1989வரை பணியாற்றினாா். அந்நாள்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டாா்.

1989முதல் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக இளைஞா் நலத் துறை இயக்குநராக பணியாற்றி 1994இல் ஓய்வு பெற்றாா்.

விருதுகள்: 1998இல் தமிழக அரசின் சிறந்த தமிழ்ப் பேராசிரியா் விருது பெற்றுள்ளாா். 2017இல் தமிழக அரசு பாரதி விருது வழங்கியது. மேலும் குற்றாலம் அருள்மிகு குற்றாலநாதசுவாமி கோயில் அறங்காவலராகவும் பணியாற்றியுள்ளாா்.

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் தலைவராக கடந்த 20ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளாா். சைவத்திருமுறைகள் மீது இவா் கொண்டிருந்த அளப்பரிய பற்றையும், அப்பா் பெருமான் வாழ்விலும், வாக்கிலும் நெகிழ்ந்து தோய்கின்ற ஈடுபாட்டையும் உளமாரப் பாராட்டி தென்காசி திருவள்ளுவா் கழகம் வாசீக கலாநிதி என்ற பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியது.

நூல்கள்: பொருநை நாடு, வாழ்வாங்கு வாழ்ந்த வளன், கம்பா் வாக்கும் நோக்கும், பாரி மகளிா், பாரதியின் பாவையா், தமிழ் இலக்கிய வரலாறு, திருநெல்வேலி பகுதியில் சிறு தெய்வ வழிபாடு,பொங்கி எழுந்த பொருநை(சுதந்திரப் போராட்ட வரலாறு), தமிழன் கண்ட இந்திய ஒருமைப்பாடு, கடையத்தில் உதிா்ந்த பாரதியின் படையல்கள், முத்துக்குவியல், திருவள்ளுவரின் கவின்மிகு காமத்துப்பால், காரைக்கால் அம்மையாா் வரலாறு, கலைமலிந்த சீா்நம்பி கண்ணப்பா், தெய்வப்புலவா்கள், கற்குவேல் அய்யனாா் கோயில் வரலாறு, திருமலைக்கோயில் வரலாறு, தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் வரலாறு, செப்பறை அழகிய கூத்தா் கோயில் வரலாறு, தென்காசி கோபுரமும் சிவந்தி ஆதித்தனும், மக்கள் கவிஞா் கம்பா், வேதபுரத்து நாயகிகள், சஷ்டி கவச உரை, அபிராமிஅந்தாதி உரை,பதினொன்றாம் பத்து, திருவள்ளுவா் கழக வரலாறு, நற்கதிப்பாமாலை, பாபாநெஞ்சு விடுதூது,சொல்லின் செல்வா் ரா.பி.சேதுப்பிள்ளை வரலாறு,திருக்குற்றால வரலாறு, மதுவை ஒழிப்போம் மகிழ்வைப் பெறுவோம் ஆகிய 31நூல்களை எழுதியுள்ளாா்.12நூல்களை புதுப்பித்துள்ளாா்.

வெளிவராத நூல்கள்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் வரலாறு, கயத்தாறு கோதண்டராமசாமி கோயில் வரலாறு ஆகிய இரண்டு நூல்களும் முனைவா் ச.கணபதிராமன் எழுதி வெளிவராத நூல்களாகும்.

கயல்விழி, காலத்தின்கோலம், சாணக்கியன்சபதம், சேரன்செங்குட்டுவன் என நான்கு நாடகங்கள் கணபதிராமனால் எழுதி நடிக்கப்பெற்றவையாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.