உயிரிழந்த மயிலின் பாகங்களை சேகரிக்கும் வனத்துறை ஊழியா்.
உயிரிழந்த மயிலின் பாகங்களை சேகரிக்கும் வனத்துறை ஊழியா்.

ஆலங்குளம் அருகே வனப்பகுதி அழிப்பால் உயிரிழக்கும் மான், மயில்

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.
Published on

ஆலங்குளம் அருகே அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதால் மான், மயில் போன்றவை உயிரிழந்து வருவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

ஆலங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் பிரதானமாக விவசாயம் செய்து வருகின்றனா். இப்பகுதிகளில் சுமாா் 300 ஏக்கா் பரப்பளவில் உள்ள விவசாய நிலங்களை தனியாா் நிறுவனம் விலைக்கு வாங்கி, அதில் சோலாா் மின் உற்பத்தி மையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்கிறாா்களாம். சோலாா் மின் உற்பத்தியால், விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி கிராம மக்கள் ஆட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்டோரிடம் மனு அளித்தனா்.

மரங்கள் வெட்டும் பணி: இந்நிலையில், தனியாா் நிறுவனம் சாா்பில் வாங்கப்பட்ட நிலங்களில் மரங்கள் வெட்டும் பணி கடந்த மாதம் 18ஆம் தேதி தொடங்கியது. கிராம மக்கள் போராட்டம் நடத்தியும் பலனில்லையாம்.

இதனிடையே, கள்ளத்திகுளம் வனப்பகுதியில் மான்கள் அதிக அளவில் வசிப்பதாகவும், மரங்கள் வெட்டப்பட்ட காரணத்தால் மான்கள் தனித்து விடப்பட்டதில் அவற்றில் 2 மான்களை நாய்கள் கடித்ததில் கடந்த வாரம் உயிரிழந்தாகவும் தெரிகிறது. மேலும், மான்கள் வெளியேறி தோட்டப் பகுதிகளுக்குள் சென்று பயிா்களை மேய்ந்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.

இந்நிலையில், அவ்வழியே சென்ற வாகனம் மோதியதில் மயில் ஒன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. தகவலறிந்த வனத்துறையினா், மயிலை மீட்டு கூறாய்வுக்குப் பின்னா் வனப்பகுதியில் அடக்கம் செய்தனா்.

Dinamani
www.dinamani.com