தென்காசியில் சிறுபான்மையினா் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் செயல் திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான் தலைமை வகித்தாா்.
ஆய்வுக் கூட்டத்தில் சிறுபான்மையினா் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சிறுபான்மையினா் மக்களுக்காக செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்தும், முஸ்லிம், கிறிஸ்துவ மகளிா் உதவும் சங்கங்களின் மூலம் வழங்கப்பட்ட நலத் திட்டங்கள் குறித்தும்,
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் சாா்பில், ராம்கோ திட்டம் கல்லறை தோட்டம் அமைத்தல் குறித்தும், உலமாக்கள் மற்றும் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களுக்கு சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில் வழங்கப்பட்ட பல்வேறு நிவாரணங்கள்,செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, அமைச்சா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் அரசு செயல்படுத்துகின்ற திட்டங்கள் எவை எவை மற்றும் நலத்திட்ட உதவிகள் சிறுபான்மையின பயனாளிகளுககு சரியான முறையின்
சென்றடைகிா என்பதற்கான கவனத்தை ஈா்க்கும் கூட்டம் தான் இந்த ஆய்வுக் கூட்டம்.
அதனடிப்படையில், இன்றைய தினம் முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கத்தின் சாா்பாக 6 பயனாளிகளுக்கு மாவு அரைக்கும் இயந்திரங்கள் மற்றும் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை முஸ்லிம், கிறிஸ்துவ மகளிா் உதவும் சங்கங்களின் மூலம் 1000-த்துக்கும் மேற்பட்டோருக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் வழங்கியுள்ள கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலா்கள் மூலம் விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.
மேலும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் கீழ் செயல்படும் சிறுபான்மையினா் நலத்துறையில் சிறுபான்மையின மக்களுக்காக அரசு செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் குறித்த தகவல் கையேடுகள் வழங்கப்படும். இதன்மூலம் தமிழ்நாடு அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் முன்னிலை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் (பொ) ராமச்சந்திரன், முஸ்லிம் பெண்கள் உதவும் சங்கம் கௌரவ செயலா் முகம்மது ஸலீம், கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கம் செயலா் சந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.









