சுவர் சித்திரம் வரைதல் போட்டி:மாணவ- மாணவியர் ஆர்வம்

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவரில் மாநகராட்சியின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி 
Updated on
1 min read

பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவரில் மாநகராட்சியின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுவர் சித்திரம் வரைதல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவரில் இருந்த போஸ்டர்கள்,  தனியார் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு, தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் பங்கேற்கும் சுவர் சித்திரம் வரைதல் போட்டி நடத்தப்படுகிறது. இதில், 15-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். 
சித்த மருத்துவக் கல்லூரி சுற்றுச்சுவர்களில் விளம்பர சுவரொட்டிகளை யாரும் ஒட்டக் கூடாது. இந்த ஓவியங்கள் தூய்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரையப்படுகிறது. இந்த ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கமும், பங்கேற்ற மாணவ, மாணவிகள் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்தப் போட்டியில் சாரதா மகளிர் கல்லூரி அணியினர் முதல் பரிசையும், சித்த மருத்துவக் கல்லூரி அணியினர் 2-ஆவது பரிசையும், மேலப்பாளையம் அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி அணியினர் 3-ஆவது பரிசையும் பெற்றனர். பாளையங்கோட்டை ரோஸ் மேரி பள்ளி, சிருங்கேரி சாரதா பள்ளி அணிகளுக்கு சிறப்பு  பரிசு வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்செல்வன், சித்த மருத்துவக் கல்லூரி பேராசிரியர் சுபாஷ்சந்திரன், மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் சுப்பிரமணியன்,  சாகுல்ஹமீது, முருகேசன், சுகாதார ஆய்வாளர்கள்  இளங்கோ, நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com