மக்களவைக்கும், தமிழக சட்டப் பேரவைக்கும் இந்த ஆண்டுக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பு

இந்த ஆண்டுக்குள் மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
Updated on
1 min read

இந்த ஆண்டுக்குள் மக்களவைத் தேர்தலோடு தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவர் கூறியதாவது:
நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதையொட்டி,   தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் திங்கள்கிழமை  நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்  காங்கிரஸ் கட்சியும் பங்கேற்கும். பேருந்துக் கட்டண உயர்வையும் அரசு முழுமையாக திரும்பப் பெற வேண்டும். தமிழகத்தில் தொழில் வளர்ச்சி இல்லை.  1 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். ஊழல்   20 சதவீத அளவுக்கு உயர்ந்துவிட்டது. 
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு என்று எந்த அறிவிப்பும் இல்லை.   கடந்த 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு எதுவுமே செய்யாத மத்திய அரசு, இப்போது மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில்  பட்ஜெட்டை தயாரித்துள்ளது.  முன்கூட்டியே மக்களவைத் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டுக்குள் மக்களவைத் தேர்தலோடு, தமிழக சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.
தமிழக சட்டப் பேரவை உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சாதகமாக நீதிமன்றத் தீர்ப்பு வந்தால், ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.
 கோடிக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட ஒரு கட்சியில்  (காங்கிரஸ்) சிறுசிறு கருத்து வேறுபாடு  என்பது ஒரு பிரச்னையே இல்லை.  காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு, திருநெல்வேலி வந்தபோது அவருக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டிருந்தால், அது தொடர்பாக அவர் புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
காமராஜர் பிறந்த நாள் முதல் தமிழகத்தில் 32 வருவாய் மாவட்டங்களிலும் வேன் மூலம் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளேன். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுக்கூட்டம் நடைபெறும். அதில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.
அப்போது மாநகர் மாவட்டத் தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்டத் தலைவர் சிவக்குமார், மேற்கு மாவட்டத் தலைவர் பழனி, முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com