புளியங்குடி நகராட்சி, சிந்தாமணியில் ரூ. 52 லட்சம் மதிப்பில் நிறைவேற்றப்பட்டுள்ள குடிநீர்த் திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்காக அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தார்.
புளியங்குடி நகராட்சியில் 3 முதல் 8 ஆவது வார்டு வரையுள்ள பகுதியில் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சடையனேரி கண்மாயில் 10 ஆழ்துளைக் கிணறுகள் அமைத்து, அவற்றிலிருந்து 10 லட்சம் லிட்டர் குடிநீரை சேகரித்து, 2 கி.மீ. தொலைவிலுள்ள சிந்தாமணியில் நீர்தேக்கத் தொட்டிக்கு குழாய்கள் மூலம் கொண்டுவந்து சேமித்து, மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் வகையில் ரூ. 52 லட்சம் மதிப்பில் இந்தக் குடிநீர் திட்டப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மக்களுக்கு அர்ப்பணிக்கும் விதமாக, சிந்தாமணியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், குடிநீர் திட்டப் பணியை, மாநில ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலட்சுமி திறந்துவைத்தார்.
பின்னர், புளியங்குடி நகராட்சி அலுவலகத்தில் ரூ. 10 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட கூட்ட அரங்கை அமைச்சர் திறந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு, வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ அ. மனோகரன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் பவுன்ராஜ் வரவேற்றார். இதில், முன்னாள் நகர்மன்றத் தலைவி தேவகி குழந்தைவேல், நகர்மன்ற துணைத் தலைவர் பரமேஸ்வர பாண்டியன், கோட்டாட்சியர் தங்கராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.