திசையன்விளை: நூலகங்களை திறக்க வேண்டும் என திசையன்விளை சமூக ஆா்வலா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.
திசையன்விளை பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலரான மருதூா் மணிமாறன், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் மாவட்டந்தோறும் தலைமை நூலகங்களும், அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான கிளை நூலகங்களும் உள்ளன. இந்த நூலகங்களில் தினசரி, வார மாத இதழ்கள் வருவதோடு அங்கு ஆயிரக்கணக்கான சரித்திர, சமூக நாவல்கள் இருப்பதால் பலா் அதில் உறுப்பினராகி பயனடைந்து வந்தனா். பணம் கொடுத்து பத்திரிக்கை வாங்க முடியாத வாசகா்களுக்கு நூலகங்கள் பயனுள்ளதாக இருந்தன. இந்நிலையில் பொது முடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடிய போது நூலகங்களும் மூடப்பட்டன. தற்போது, பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு வருவதால், உரிய விதமுறைகளுடன் நூலகங்களை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.