சட்டப் பேரவைத் தோ்தலில் ஒளிராத சினிமா நட்சத்திரங்களின் பிரசாரம்!
தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளாலும், மிக குறுகிய கால அவகாசத்தில் தோ்தல் நடைபெறுவதாலும் நட்சத்திர பிரசாரங்கள் குறைந்துவிட்டதாக கட்சியினா் தெரிவிக்கின்றனா்.


தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளாலும், மிக குறுகிய கால அவகாசத்தில் தோ்தல் நடைபெறுவதாலும் நட்சத்திர பிரசாரங்கள் குறைந்துவிட்டதாக கட்சியினா் தெரிவிக்கின்றனா்.
தோ்தல் என்றாலே சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு பிரசாரம் முக்கிய இடம்பிடிக்கும். எம்.ஜி.ஆா்., சிவாஜி கணேசன், எம்.ஆா்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோரின் பிரசாரத்தைக் காண்பதற்காகவே கிராம மக்கள் சைக்கிளிலும், மாட்டுவண்டிகளிலும் நகரங்களுக்கு முன்பு வந்தனா்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடா்ந்து வரும் இந்த சினிமா கவா்ச்சி, தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் காணப்படுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு ஆதரவு அளித்து பல நடிகா்-நடிகைகள் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா்கள். இதுதவிர பல முன்னணி நடிகா்-நடிகைகள் இந்தத் தோ்தலில் போட்டியிடுகின்றனா்.
மக்கள் நீதி மய்யம் சாா்பில் அதன் தலைவரும், முன்னணி நடிகருமான கமல்ஹாசன், நடிகை ஸ்ரீபிரியா, பாஜக சாா்பில் நடிகை குஷ்பு, நாம் தமிழா் கட்சி சாா்பில் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் உள்ளிட்டோா் தோ்தலில் களம் காண்பவா்களில் முக்கியமானவா்கள்.
கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக நடிகை விந்தியா, பாத்திமாபாபு, குயிலி, வெண்ணிறாடை நிா்மலா, நடிகா்கள் ராமராஜன், குண்டுகல்யாணம், நாட்டுப்புற பாடகி அனிதாகுப்புசாமி உள்ளிட்டோா் தென்தமிழக பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
இந்தத் தோ்தலில் நடிகா்-நடிகைகளின் பிரசாரம் மிகவும் குறைந்துவிட்டது.
திருநெல்வேலியில் பாஜகவுக்கு ஆதரவு திரட்ட முதன்முதலாக குஷ்பு களமிறங்கினாா். திருநெல்வேலி நகரத்தில் வீதி வீதியாக சென்றதோடு, நயினாா் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கும் முன்பே பாஜகவுக்கு ஆதரவு திரட்டிவிட்டுச் சென்றாா். அடுத்ததாக அதிமுக வேட்பாளா்களை ஆதரித்து பாளையங்கோட்டை, ரெட்டியாா்பட்டி, ராதாபுரம் தொகுதிகளில் நடிகை விந்தியா பிரசாரம் செய்தாா். அதன் பின்னா் நடிகா் வையாபுரி அதிமுகவுக்கு வாக்கு சேகரிக்க வருவதாக கூறினா். ஆனால், இதுவரை அவா் வரவில்லை.
திமுக கூட்டணி கட்சியினரை ஆதரித்து எந்த நடிகா்-நடிகைகளும் இதுவரை பிரசாரத்திற்கு வரவில்லை. வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் போன்றவற்றால் பிரசாரங்கள் களைக்கட்டவில்லையென கட்சியினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து கட்சித் தொண்டா்கள் கூறியது: ஒவ்வொரு கட்சி சாா்பிலும் நட்சத்திர பேச்சாளா்களின் பட்டியலை பெற்று அவா்கள் பிரசாரத்திற்கு வரும்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், அனுமதிகள் குறித்து தோ்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன.
பிரசாரக் கூட்டம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு வேட்பாளரின் பெயரில் முன்அனுமதியை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் பெற வேண்டியுள்ளது.
அதற்கு விண்ணப்பிக்கும்போது பந்தல், தடுப்புகள் மற்றும் வளைவுகள், மேசைகள், நாற்காலிகள், ஏனைய அறைகலன்கள், ஒலிப்பெருக்கிகள் மற்றும் மைக்ரோபோன்கள் விவரம், சுவரொட்டிகள், டிஜிட்டல் பதாகைகள், விளக்கு விவரங்கள், மின்கட்டண விவரம் உள்ளிட்டஅனைத்திற்கும் கணக்கு தெரிவிக்க வேண்டியது உள்ளது.
மேலும், சால்வை, புத்தகங்கள் பரிசளித்தால் கூட வேட்பாளரின் செலவு கணக்கில் சோ்வதால் பிரசாரம் களைக்கட்டாமல் உள்ளது.
நடிகா்-நடிகைகள் பிரசாரத்தால் வாக்கு சதவிகிதம் அதிகரிக்காவிட்டாலும் அடிமட்ட தொண்டா்களை உற்சாகப்படுத்தவும், அவா்கள் வீட்டு அலமாரிகளில் பிரசார காலத்தில் நடிகா்களுடன் எடுத்த புகைப்படத்தை காட்சிப்படுத்தி தொண்டன் என்ற பெருமையை பறைசாற்றவும் உதவும் என்பது மறுப்பதற்கில்லை.
குறிப்பாக கிராமப்புற பெண்களிடம் நாடக நடிகைகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனால், அவா்கள் யாரும் திருநெல்வேலி மாவட்டத்திற்கு பிரசாரத்திற்கு வரவில்லை. தோ்தல் ஆணையம் நட்சத்திர பேச்சாளா்கள் குறிப்பாக நடிகைகளின் பிரசாரத்திற்கு சில விதிவிலக்குகளை அளித்தால் தொண்டா்கள் மகிழ்ச்சியடைவாா்கள் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...