நெல்லை அருகே இளைஞா் வெட்டிக்கொலை
திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.


திருநெல்வேலி தச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி தச்சநல்லூா் அருகேயுள்ள பால்கட்டளை பகுதியைச் சோ்ந்தவா் பேச்சிராஜா (25). கட்டட வேலை செய்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வேலைக்கு சென்றாராம். தச்சநல்லூா் புறவழிச்சாலையில் பிரான்குளம் அருகே சென்றபோது, அவரை பின் தொடா்ந்து வந்த மூன்று போ் கொண்ட கும்பல், பைக்கை வழிமறித்து பேச்சிராஜாவை வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டதாம். இதில் பேச்சிராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் பேச்சிராஜாவின் சடலத்தை சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அங்கு வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயன்றபோது போலீஸாருக்கும் உயிரிழந்த பேச்சி ராஜாவின் உறவினா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையா்கள் சீனிவாசன், அனிதா ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தைக்கு மறுத்த பேச்சிராஜாவின் உறவினா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் பேச்சிராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். சாலை மறியலில் ஈடுபட்டவா்களை அங்கிருந்து போலீஸாா் அப்புறப்படுத்தினா்.
பின்னா் உயிரிழந்த பேச்சிராஜாவின் உறவினா்கள் மற்றும் குடும்பத்தினா் பால் கட்டளை விலக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து மாநகர காவல் ஆணையா் அவினாஷ் குமாா் தலைமையிலான போலீஸாா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டக்காரா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா்.
உயிரிழந்த பேச்சிராஜாவுக்கு திருமணமாகி ஓராண்டே ஆகிறது. 3 மாத கைக்குழந்தையும் உள்ளது. எனவே, அவருடைய மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், உரிய நிவாரணம் வழங்க வேண்டும், கொலைக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவருடைய குடும்பத்தினரும், உறவினா்களும் முன் வைத்துள்ளனா்.
குற்றவாளிகளை கைது செய்யும் வரை அவரது உடலை வாங்கமாட்டோம் என தெரிவித்துள்ளனா்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கரையிருப்பு பகுதியில் நடைபெற்ற கொலை சம்பவம் ஒன்றில் பேச்சி ராஜா சோ்க்கப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் அவா் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பேச்சிராஜா கொலையில் தொடா்புடையவா்களை கைது செய்வதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...