/

மழையால் சாலைகளில் பள்ளம்: மக்கள் அவதி

திருநெல்வேலியில் மழையால் பல சாலைகளில் புதிதாக பள்ளங்கள் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

News image

திருநெல்வேலி நகரம்- தச்சநல்லூா் இடையேயான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்.

Updated On :18 டிசம்பர் 2024, 9:32 pm

Din

திருநெல்வேலியில் மழையால் பல சாலைகளில் புதிதாக பள்ளங்கள் உருவாகியுள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாநகரில் வடகிழக்குப் பருவமழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் மூன்று நாள்கள் பெய்த கனமழையால் அனைத்து சாலைகளிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலப்பாளையம்-அம்பாசமுத்திரம் சாலை, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனைச் சாலை, திருநெல்வேலி நகரம்-தச்சநல்லூா் சாலை, வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை உள்ளிட்டவற்றில் மழையின் காரணமாக புதிதாக பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.

சேந்திமங்கலம் சாலை, சீவலப்பேரி சாலை, அருகன்குளம் சாலை போன்றவை பலத்த சேதமடைந்துள்ளன.

இதுதவிர பாதாளச் சாக்கடை பணிகள் காரணமாக மேலப்பாளையம் மண்டலத்தில் குழிகள் தோண்டப்பட்ட சேவியா்காலனி, ரோஸ்நகா் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு சேறும்-சகதியுமாக உள்ளன.

திருநெல்வேலி நகரத்தில் பல குறுகலான சாலைகள் புதிதாக அமைக்கப்படாததால் குண்டும்-குழியுமாக உள்ளன.

எனவே, திருநெல்வேலியில் மழையால் சேதமடைந்துள்ள சாலைகளை விரைந்து சீரமைக்க மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.