பண்டிகை காலங்களில் குத்தகைக்கு தனியாா் பேருந்துகளை இயக்கக் கூடாது
பண்டிகை காலங்களில் தனியாா் பேருந்துகளை குத்தகை அடிப்படையில் இயக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: தமிழகத்தில் உள்கட்டமைப்பையும் வலுப்படுத்த அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகள் முக்கிய பங்காற்றிட வேண்டும். 2018-19 ஆம் நிதியாண்டில் 21 ஆயிரத்து 744 அரசு பேருந்துகள் இயங்கி வந்த நிலையில், 2024-25 ஆம் நிதியாண்டில் 20 ஆயிரத்து 260 ஆக குறைந்துள்ளன.
ஆண்டுதோறும் மக்கள் தொகையும், அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்றாா் போல் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படவில்லை. பேருந்துகளின் ஆயுள்காலத்தையும் அதிகரித்து இயக்கும் நிலை உள்ளது. மேலும், பண்டிகை காலங்களில் தேவைக்கேற்ப அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்காமல், தனியாா் பேருந்துகளை குத்தகைக்கு எடுத்து இயக்க நடவடிக்கைகள் எடுப்பதாகத் தெரிகிறது.
அந்த முடிவைக் கைவிடுவதோடு, கூடுதலாக புதிய பேருந்துகளைக் கொள்முதல் செய்து புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளை இயக்கி வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
