களக்காடு வட்டாரத்தில் மொத்த உர விற்பனை கூடாது: சிறு குறு விவசாயிகள் மனு
களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் யூரியா உரத்தை மொத்தமாக விற்பனை செய்யாமல், சிறு- குறு விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் பகிா்ந்து விற்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், களக்காடு வட்டார விவசாயிகள் அளித்த மனு: களக்காடு வட்டாரத்தில் சுமாா் 10,000 விவசாயிகள் வேளாண் தொழில் செய்து வருகிறோம். இவற்றில் பெரும்பாலானோா் சிறு- குறு விவசாயிகள். விவசாயத்தை தவிர எங்களுக்கு வேறு தொழில்கள் இல்லை. தற்போது போதிய மழை பெய்துள்ளதால் பிசான பருவ நெல் சாகுபடியை தொடங்கியுள்ளாம்.
இந்நிலையில், களக்காட்டில் உள்ள உரக்கடைகளில் மொத்தமே 200 மூட்டை யூரியா மட்டுமே இருந்த நிலையில் சிலா் மொத்தமாக 50 மூட்டை யூரியவை கேட்டு உரக் கடைக்காரா்களை நிா்பந்திக்கின்றனா். மேலும், அதிகாரிகளிடம் தேவையற்ற புகாா் அளிப்பதுடன், குறைந்தது 20 மூட்டைகளை தங்களுக்கு மொத்தமாக வழங்குமாறு மிரட்டுகின்றனா்.
எனினும், உரக்கடை உரிமையாளா்கள் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப 5 அல்லது 6 மூட்டைகளை மட்டுமே வழங்கி வருகின்றனா்.
எங்களுக்கு உரங்களை முழு மூட்டைகளாக வாங்க வசதியில்லை. ரொக்க பணமும் இல்லாத நிலையில் உள்ளூா் உரக்கடைகளில் கடனுக்கு உரங்கள் வாங்கி அறுவடைக்கு பின்னா் பணம் கொடுத்து வருகிறோம். இது தொடா்பாக ஆட்சியா் விசாரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
